1 நாளாகமம் 9:17-32
17
வாசல் காவலரைச் சேர்ந்தவர்கள்: சல்லூம், அக்கூப், தல்மோன் அகீமான் என்பவர்களும், இவர்களின் சகோதரர்களும். சல்லூம் அவர்களுடைய தலைவன்.
18
அவனே கிழக்கிலுள்ள அரச வாசலை இந்நாள்வரை காவல் செய்பவன். இவர்களே லேவிய முகாமைச் சேர்ந்த வாசல் காவலர்.
19
கோராகின் மகனாகிய எபியாசாப்புக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடை வேலையை விசாரித்தார்கள். அவர்கள் தந்தையர்கள் யெகோவாவின் ஆலய வாசலைக் காவல்செய்வதற்குப் பொறுப்பாயிருந்தது போலவே, கூடாரத்திற்குப் போகிற வழியைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
20
முற்காலத்தில் எலெயாசாரின் மகன் பினெகாஸ் வாசல் காப்போருக்குப் பொறுப்பாய் இருந்தான். யெகோவா அவனுடன் இருந்தார்.
21
மெசெல்மியாவின் மகன் சகரியா சபைக் கூடாரத்திற்கு வாசல் காவலனாயிருந்தான்.
22
வாசல்களிலெல்லாம் காவலிருக்க தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் 212 பேர். அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் வம்சாவழியின்படியே பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். தாவீதும் தரிசனக்காரனான சாமுயேலும் இவர்களை நம்பிக்கைக்குரிய பதவிகளுக்கு அமர்த்தினர்.
23
அவர்களும் அவர்களுடைய சந்ததிகளும் கூடாரம் என்று அழைக்கப்பட்ட யெகோவாவினுடைய ஆலயத்தின் வாசலைக் காவல் காப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
24
வாசல் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் இருந்தார்கள்.
25
அவர்களுடைய சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து காலத்திற்குக் காலம் ஏழுநாட்களுக்கு கடமைகளைப் பகிர்ந்துகொள்ள வரவேண்டிருந்தது.
26
ஆனால் லேவியர்களான நான்கு பிரதான வாசல் காவலர்களிடம் இறைவனின் ஆலயத்தின் பண்டகசாலைகளுக்கும், பொக்கிஷ சாலைகளுக்கும் காவல்காப்பதற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
27
இறைவனது ஆலயத்தைச் சுற்றிக் காவல் காக்கவேண்டியிருந்ததால் இரவு முழுவதும் அவர்கள் அங்கேயே தங்கவேண்டும். அதோடு ஒவ்வொருநாள் காலையிலும் ஆலயத்தைத் திறக்கும் திறப்புக்கும் அவர்களே பொறுப்பாயிருந்தனர்.
28
அவர்களில் சிலர் ஆலயத்தின் பணிக்கு பயன்படுத்துவதற்குத் தேவையான பொருட்களுக்குப் பொறுப்பாயிருந்தனர். அவர்கள் பொருட்களை உள்ளே கொண்டுவரும்போதும், வெளியே கொண்டுபோகும் போதும் அவற்றைக் கணக்கிட்டார்கள்.
29
மற்றவர்கள் பரிசுத்த இடத்தின் பாத்திரங்களையும், மெல்லிய மாவு, திராட்சை இரசம், எண்ணெய், சாம்பிராணி மற்றும் நறுமணப் பொருட்களையும் மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்கள்.
30
அத்துடன் சில ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைக் கலப்பதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
31
கோராகியனான சல்லூமின் மூத்த மகனான மத்தித்தியா என்ற லேவியனிடம் காணிக்கை அப்பங்களைச் சுடும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
32
அவர்களின் சகோதரரான கோகாத்தியரில் சிலர், ஒவ்வொரு ஓய்வுநாளுக்கும் தேவையான அப்பங்களை மேஜையில் ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பாயிருந்தனர்.
Settings