Skip to content
1 நாளாகமம் 28:11-19

1 நாளாகமம் 28:11-19

11
பின்பு தாவீது தன் மகன் சாலொமோனிடம், ஆலயத்தின் முன்மண்டபம், அதற்கான கட்டடங்கள், களஞ்சியங்கள், மேல்பகுதிகள், உள்ளறைகள், பாவநிவிர்த்திக்கான இடம் ஆகியவற்றின் வரைபடங்களைக் கொடுத்தான்.
12
அத்துடன் யெகோவாவின் ஆலய முற்றங்கள், சூழ உள்ள எல்லா அறைகள், இறைவனின் ஆலயத்தின் அர்ப்பணிப்பு காணிக்கைகளை வைக்கும் திரவியக் களஞ்சியம் போன்றவற்றைக் குறித்து, இறைவனின் ஆவியானவர் தன் மனதில் வெளிப்படுத்திய எல்லா திட்டங்களையும் கொடுத்தான்.
13
அவன் ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகியோரின் பிரிவுகளைப்பற்றியும், யெகோவாவின் ஆலயத்தின் பணியின் எல்லா வேலைகளைப்பற்றியும், வழிபாட்டிற்குப் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களைப்பற்றியும் எல்லா அறிவுறுத்தல்களையும் அவனுக்குக் கொடுத்தான்.
14
பலவிதமான வழிபாடுகளில் பயன்படுத்த தங்கப் பாத்திரங்களுக்குத் தேவையான தங்கத்தின் அளவையும், வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியின் நிறையையும் குறிப்பிட்டான்:
15
ஒவ்வொரு விளக்கிற்கும் அதன் தாங்கிக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் வெள்ளி விளக்குகளுக்கும் அதன் தாங்கிகளுக்கும் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டு ஒவ்வொரு விளக்கின் பாவனைக்கேற்ப கொடுத்தான்.
16
இறைவனுக்கு அர்ப்பணிக்கும் அப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைகளுக்கும் தேவையான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் மேஜைகளுக்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான்.
17
இன்னும் முள்ளுக் கரண்டிகள், தெளிப்புக் கிண்ணங்கள், பெரிய ஜாடிகள் ஆகியவற்றுக்கு வேண்டிய சுத்தத் தங்கத்தையும், ஒவ்வொரு தங்கப் பாத்திரத்திற்கும் தேவையான தங்கத்தையும் வெள்ளிப் பாத்திரத்திற்குத் தேவையான வெள்ளியையும் குறிப்பிட்டான்.
18
தூபபீடத்திற்குத் தேவையான சுத்தமான தங்கத்தையும் குறிப்பிட்டான். அத்துடன் யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தங்கள் செட்டைகளை விரித்துப் பாதுகாக்கும் தங்க கேருபீன்களின் தேருக்கான வரைபடத்தையும் கொடுத்தான்.
19
“இவையெல்லாவற்றையும் யெகோவா தமது கரத்தின் எழுத்தாக எனக்குத் தந்திருக்கிறார். அவர் இந்த வரைபடத்தின் எல்லா விவரங்களையும் எனக்கு விளக்கியிருக்கிறார்” என்று தாவீது சொன்னான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options