1 நாளாகமம் 28:1-10
1
தாவீது இஸ்ரயேலின் அதிகாரிகள் எல்லோரையும் எருசலேமில் கூடிவரச் செய்தான். கோத்திரங்களின்மேல் அதிகாரிகளாய் இருந்தவர்களையும், அரச இராணுவப் பிரிவுகளின் தளபதிகளையும், ஆயிரம்பேருக்குத் தளபதிகளையும் கூடிவரச் செய்தான். அத்துடன் நூறுபேருக்குத் தளபதிகளையும், அரசனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் உண்டான உடைமைகளுக்கும், வளர்ப்பு மிருகங்களுக்கும் பொறுப்பதிகாரிகளையும், அரண்மனைக்குப் பொறுப்பதிகாரிகளையும் வலிமைமிக்க மனிதர்களையும், தைரியமான வீரர்களையும் கூடிவரச் செய்தான்.
2
அப்பொழுது அரசன் தாவீது எழுந்து நின்று, “எனது சகோதரரே, எனது மக்களே, எனக்கு செவிகொடுங்கள். நான் ஒரு வீட்டைக் கட்டி அதை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கான தங்குமிடமாகவும், இறைவனின் பாதபடியாகவும் செய்ய என் மனதில் நினைத்திருந்தேன். அதைக் கட்டவேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.
3
ஆனால் இறைவன் என்னிடம், ‘என்னுடைய பெயருக்கான ஆலயத்தைக் கட்டுவது நீயல்ல; ஏனெனில் நீ இரத்தம் சிந்திய இராணுவவீரனாயிருக்கிறாய்’ என்றார்.
4
“ஆயினும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்றென்றைக்கும் இஸ்ரயேலின் அரசனாயிருக்கும்படி, எனது முழுக் குடும்பத்திலிருந்தும் என்னையே தேர்ந்தெடுத்தார். அவர் யூதாவைத் தலைமையாகத் தெரிந்துகொண்டார். யூதா கோத்திரத்திலிருந்து எனது குடும்பத்தை தெரிந்தெடுத்தார். அதோடு எனது தகப்பனின் மகன்களுக்குள் என்னையே இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்க பிரியங்கொண்டார்.
5
யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தார். ஆனாலும் அவர்களெல்லோரிலும் எனது மகன் சாலொமோனையே இஸ்ரயேலின்மேல் யெகோவாவினுடைய அரசாட்சியின் அரியணையில் அமரும்படி தெரிந்துகொண்டார்.
6
அவர் என்னிடம், ‘உனது மகன் சாலொமோனே எனக்கு ஆலயத்தையும், ஆலயமுற்றங்களையும் கட்டப்போகிறவன். ஏனெனில், அவனை நான் எனது மகனாக தெரிந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன்.
7
அவன் எனது கட்டளைகளையும், சட்டங்களையும் இந்நாட்களில் நடப்பதைப்போல் நடைமுறைப்படுத்துவதில் உறுதியாய் இருந்தால், நான் அவனுடைய ஆட்சியை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்படி செய்வேன்’ என்றார்.
8
“எனவே இப்பொழுது எல்லா இஸ்ரயேலருடைய பார்வையிலும், இறைவனின் சபையின் பார்வையிலும், இறைவனின் செவிகேட்கவும் நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்கிறதாவது: இறைவனாகிய யெகோவாவின் எல்லாக் கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருங்கள். அப்பொழுது இந்த நல்ல நாட்டை நீங்கள் உரிமையாக்கி, உங்களுக்குப்பின் உங்கள் வழித்தோன்றலுக்கும் என்றென்றுமான உரிமைச்சொத்தாக விட்டுச்செல்வீர்கள்.
9
“என் மகனாகிய சாலொமோனே, நீ உன் தகப்பனின் இறைவனை ஏற்றுக்கொண்டு, முழு இருதய அர்ப்பணிப்புடனும் முழு மனதுடனும் அவருக்குப் பணிசெய். ஏனெனில், யெகோவா எல்லா இருதயங்களையும் ஆராய்கிறவரும், சிந்தனைகளுக்குப் பின்னுள்ள நோக்கங்களை விளங்கிக்கொள்கிறவருமாய் இருக்கிறார். நீ அவரைத் தேடினால் அவர் உனக்குக் காணப்படுவார். நீ அவரைக் கைவிட்டுவிட்டால், அவரும் உன்னை என்றென்றைக்கும் தள்ளிவிடுவார்.
10
இப்பொழுதும் யோசித்துப்பார். யெகோவா தமது பரிசுத்த இடமான ஆலயத்தைக் கட்டுவதற்கு உன்னையே தெரிந்தெடுத்திருக்கிறார். மனவுறுதியோடு வேலையைச் செய்” என்றான்.
Settings