Skip to content

சங்கீதம்149

மகிழ்ச்சியுடன் துதிக்க அழைப்பு

1
யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள், பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.
2
இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்; சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.
3
அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும், தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.
4
ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்; தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.
5
பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.

பரிசுத்தர்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுகிறார்கள்

6
அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும், கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.
7
அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,
8
அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும், அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,
9
அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக. இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை. யெகோவாவைத் துதியுங்கள்.
Use arrow keys to navigate
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options