Skip to content

சங்கீதம்116

1
நான் யெகோவாவிடம் அன்பாயிருக்கிறேன், ஏனெனில் அவர் என் குரலைக் கேட்டார்; இரக்கத்திற்காக நான் கதறியதை அவர் கேட்டார்.
2
அவர் எனக்குச் செவிகொடுத்தபடியால், நான் என் வாழ்நாளெல்லாம் அவரை வழிபடுவேன்.
3
மரணக் கயிறுகள் என்னைச் சிக்கவைத்தன; பாதாளத்தின் வேதனைகள் என்மீது வந்தன; கஷ்டமும் கவலையும் என்னை மேற்கொண்டன.
4
அப்பொழுது நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுச் சொன்னதாவது: “யெகோவாவே, என்னைக் காப்பாற்றும்!”
5
யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்; நம்முடைய இறைவன் கருணை நிறைந்தவர்.
6
யெகோவா கற்றுக்கொள்ளவிருக்கும் இருதயமுள்ளவர்களைப் பாதுகாக்கிறார்; நான் தாழ்த்தப்பட்டபோது, அவர் என்னை இரட்சித்தார்.
7
என் ஆத்துமாவே, மீண்டும் நீ இளைப்பாறு; யெகோவா உனக்கு எவ்வளவு நல்லவராய் இருக்கிறார்.
8
யெகோவாவே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து விடுவித்தீர்; என் கண்களைக் கண்ணீர் சிந்துவதிலிருந்தும், என் கால்களை இடறுவதிலிருந்தும் விடுவித்தீர்.
9
நான் உயிருள்ளோரின் நாட்டிலே யெகோவாவுக்கு முன்பாக நடப்பேன்.
10
“நான் மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன்” என்று நான் சொன்னபோதிலும், நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்.
11
ஆனாலும் என் மனச்சோர்வினாலே, “எல்லா மனிதரும் பொய்யர்” என்று நான் சொன்னேன்.
12
யெகோவா எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்கும் பதிலாக, நான் அவருக்கு எதைத்தான் கொடுப்பேன்?
13
நான் இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திக்கொண்டு யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
14
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக் கடன்களை அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.
15
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றது.
16
யெகோவாவே, உண்மையாகவே நான் உமது பணியாளனாய் இருக்கிறேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாய் இருக்கிறேன்; என்னைக் கட்டியிருந்த சங்கிலியிலிருந்து நீர் என்னை விடுதலையாக்கினீர்.
17
நான் உமக்கு ஒரு நன்றிக் காணிக்கையைப் பலியிட்டு, யெகோவாவினுடைய பெயரைச் சொல்லி வழிபடுவேன்.
18
நான் யெகோவாவுக்குச் செய்த நேர்த்திக்கடனை, அவருடைய மக்கள் எல்லோருக்கும் சமுகத்தில் நிறைவேற்றுவேன்.
19
எருசலேமே உன் நடுவில் யெகோவாவினுடைய ஆலய முற்றங்களில், நான் எனது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options