Skip to content

லேவியராகமம்3

1
“ ‘யாராவது ஒருவனுடைய காணிக்கை சமாதான காணிக்கையாக இருந்து, அவன் மாட்டு மந்தையிலிருந்து காளையையோ அல்லது பசுவையோ செலுத்துவதானால், அவன் யெகோவாவுக்கு முன்பாக குறைபாடற்ற ஒரு மிருகத்தை ஒப்படைக்கவேண்டும்.
2
அந்த பலி மிருகத்தின் தலையின்மேல் அவன் தன் கையை வைத்து, சபைக்கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
3
சமாதான காணிக்கையிலிருந்து நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியன: உள்ளுறுப்புகளை மூடியுள்ள கொழுப்பு முழுவதும், அவற்றை இணைக்கிற கொழுப்பு,
4
விலாவுக்குக் கீழ்ப்புறமாக இருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும்.
5
ஆரோனின் மகன்கள் இவற்றைப் பலிபீடத்தில் எரிகிற விறகின் மேலேயுள்ள தகன காணிக்கையின்மேல் வைத்து எரிப்பார்கள். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
6
“ ‘அவன் ஆட்டு மந்தையிலிருந்து ஒரு மிருகத்தை சமாதான பலியாக யெகோவாவுக்குச் செலுத்துவானாகில், அவன் குறைபாடற்ற ஒரு ஆணையோ, பெண்ணையோ செலுத்தவேண்டும்.
7
அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைச் செலுத்துவதானால், அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து செலுத்தவேண்டும்.
8
அவன் தன் காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைத்து, சபைக்கூடார வாசலில் அதை வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
9
சமாதான காணிக்கையிலிருந்து நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் பலியாக அவன் கொண்டுவர வேண்டியன: அதன் கொழுப்பும், முதுகெலும்புக்கு அருகே வெட்டியெடுக்கப்பட்ட கொழுப்பான வால் முழுவதும், உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் அல்லது இணைத்திருக்கும் கொழுப்பு முழுவதும்,
10
விலாவுக்குக் கீழ்ப்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவற்றைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமாகும்.
11
ஆசாரியன் அவற்றைப் பலிபீடத்தின்மேல் உணவாகவும், யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகவும் எரிப்பான்.
12
“ ‘அவனுடைய காணிக்கை ஒரு வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
13
அவன் அதனுடைய தலைமேல் தன் கையை வைத்து, சபைக் கூடாரத்திற்கு முன்பாக அதை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்கள் அதன் இரத்தத்தைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
14
அவன் தான் செலுத்தும் காணிக்கையிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தவேண்டிய காணிக்கையாவன: உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் அல்லது இணைத்திருக்கும் கொழுப்பு முழுவதும்,
15
விலாவுக்குக் கீழ்ப்புறத்தின் அருகேயிருக்கிற இரண்டு சிறுநீரகங்களும், அவைகளைச் சுற்றியுள்ள கொழுப்பும், சிறுநீரகங்களுடன் அவன் அகற்றும் ஈரலை மூடியுள்ள கொழுப்புமேயாகும்.
16
ஆசாரியன் இவைகள் எல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் உணவாக எரிக்கவேண்டும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே உரியது.
17
“ ‘கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது. நீங்கள் வாழும் இடமெல்லாம் தலைமுறைதோறும் இது உங்களுக்கு ஒரு நிரந்தர நியமமாயிருக்கும்’ என்றார்.”
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options