சங்கீதம் 107:33-43
33
யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார்,
34
செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார்.
35
அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார்.
36
பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள்.
37
அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன.
38
யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை.
39
பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்;
40
பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார்.
41
ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார்.
42
நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
43
ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.
Settings