எண்ணாகமம் 6:13-21
13
“ ‘தன்னை நசரேய விரதத்தினால் வேறுபிரித்த காலம் முடியும்போது, அவனுக்கான சட்டமாவது: அவனைச் சபைக் கூடாரத்தின் நுழைவாசலுக்குக் கொண்டுவர வேண்டும்.
14
அங்கே அவன் தன் காணிக்கைகளை யெகோவாவுக்கு ஒப்படைக்கவேண்டும். குறைபாடற்ற ஒரு வயதுடைய செம்மறியாட்டுக் கடாக்குட்டியை தகன காணிக்கையாகவும், குறைபாடற்ற ஒரு வயதுடைய பெண் செம்மறியாட்டுக் குட்டியைப் பாவநிவாரண காணிக்கையாகவும், குறைபாடற்ற ஒரு செம்மறியாட்டுக் கடாவைச் சமாதான காணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.
15
இன்னும் அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும், ஒரு கூடை புளிப்பில்லாத அப்பத்தையும் கொண்டுவர வேண்டும். அந்த அப்பங்கள் சிறந்த மாவில் எண்ணெய் கலந்து சுடப்பட்ட அடை அப்பங்களாகவும், எண்ணெய் தடவி சுடப்பட்ட அதிரசங்களாகவும் இருக்கவேண்டும்.
16
“ ‘ஆசாரியன் அவற்றை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து, பாவநிவாரண காணிக்கையாகவும், தகன காணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.
17
அவன் புளிப்பில்லாத அப்பங்கள் இருக்கும் கூடையைக் கொண்டுவந்து, அந்த செம்மறியாட்டுக் கடாவை தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும், யெகோவாவுக்குச் சமாதான காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
18
“ ‘பின்பு அந்த நசரேய விரதம் செய்து கொண்டவன் தான் அர்ப்பணித்த தலைமயிரை சபைக்கூடார வாசலில் சவரம் செய்யவேண்டும். அவன் அந்த மயிரை எடுத்து, சமாதான காணிக்கை பலியின் கீழே எரியும் நெருப்பில் போடவேண்டும்.
19
“ ‘நசரேய விரதம் செய்து கொண்டவன் தான் அர்ப்பணித்த தலைமயிரைச் சவரம் செய்தபின், ஆசாரியன் செம்மறியாட்டுக் கடாவின் அவித்த முன்னந்தொடையையும், புளிப்பில்லாமல் செய்யப்பட்டுக் கூடையில் வைக்கப்பட்டிருக்கும் அடை அப்பத்திலிருந்து ஒன்றையும், அதிரசத்திலிருந்து ஒன்றையும் அவனுடைய கைகளில் வைக்கவேண்டும்.
20
அவற்றை ஆசாரியன் யெகோவா முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். அவை பரிசுத்தமானவை. அவை ஆசாரியனுக்கே உரியவை. அத்துடன் அசைவாட்டிய நெஞ்சுப்பகுதியும், செலுத்தப்பட்ட தொடையும் ஆசாரியனுக்கே உரியவை. அதன்பின் நசரேயன் திராட்சை இரசத்தைக் குடிக்கலாம்.
21
“ ‘யெகோவாவுக்காக நசரேய விரதத்தினால் தன்னை வேறுபிரித்துக்கொண்டவனுக்குரிய சட்டம் இதுவே. அவன் தன் வேறுபிரித்தலுக்கேற்ற காணிக்கைகளையும், அத்துடன் தன்னால் கொடுக்க இயன்ற அளவு கொடுப்பவைகளைக் குறித்ததான சட்டம் இதுவே. நசரேய விரதத்திற்கான சட்டப்படி தான் செய்துகொண்ட நேர்த்திக்கடனை அவன் நிறைவேற்றவேண்டும்’ ” என்றார்.
Settings