எண்ணாகமம் 22:1-9
1
பின்பு இஸ்ரயேலர் மோவாபின் சமவெளியில் பயணம் செய்து, யோர்தான் நதிக்கு மறுகரையில் எரிகோவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
2
இஸ்ரயேலர் எமோரியருக்குச் செய்த எல்லாவற்றையும் சிப்போரின் மகன் பாலாக் கண்டான்.
3
இஸ்ரயேலர் அநேகராயிருந்தபடியால் மோவாப் திகிலடைந்தான். அவன் இஸ்ரயேலர்களைக் கண்டு பயந்து, பீதி நிறைந்தவனாயிருந்தான்.
4
மோவாபியர் மீதியானின் சபைத்தலைவர்களிடம், “புல்வெளியிலே எருது புல் தின்பதுபோல, இந்தப் பெருங்கூட்டம் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தின்றுவிடப்போகிறது” என்றார்கள். அந்நாட்களில் மோவாபியருக்கு அரசனாயிருந்த சிப்போரின் மகன் பாலாக்,
5
பேயோரின் மகன் பிலேயாமை அழைப்பிக்கத் தூதுவரை அனுப்பினான். பிலேயாம் தான் பிறந்த நாட்டில், ஐபிராத்து நதியருகேயிருந்த பெத்தூரில் இருந்தான். பாலாக் தூதுவர்களிடம், “எகிப்திலிருந்து ஒரு மக்கள் கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் நாடெங்கும் நிரம்பி எனக்குப் பக்கத்தில் குடியேறியிருக்கிறார்கள்.
6
இப்பொழுது நீ வந்து இந்த மக்களின்மேல் ஒரு சாபத்தைப்போடு. ஏனென்றால் அவர்கள் என்னைவிட அதிக பலமுள்ளவர்களாயிருக்கிறார்கள். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை அவர்களைத் தோற்கடித்து, இந்த நாட்டைவிட்டுத் துரத்திவிட என்னால் இயலும். ஏனெனில் நீ ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், நீ சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.
7
மோவாபிய சபைத்தலைவர்களும், மீதியானிய தலைவர்களும் குறிகேட்பதற்கான கூலியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அவர்கள் பிலேயாமிடம் வந்தபோது பாலாக் சொல்லியிருந்ததை அவனிடம் கூறினார்கள்.
8
பிலேயாம் அவர்களிடம், “இன்று இரவு நீங்கள் இங்கே தங்குங்கள்; யெகோவா எனக்குத்தரும் பதிலை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான். எனவே மோவாபின் தலைவர்கள் அவனுடன் தங்கினார்கள்.
9
அப்பொழுது இறைவன் பிலேயாமிடம் வந்து, “உன்னுடன் இருக்கும் இந்த மனிதர்கள் யார்?” என்று கேட்டார்.
Settings