நெகேமியா 3:6-12
6
பழைய வாசல், பாசெயாவின் மகன் யோய்தாவினாலும், பேசோதியாவின் மகன் மெசுல்லாமினாலும் திருத்தியமைக்கப்பட்டது. அவர்கள் அதன் மரத்தாலான உத்திரங்களை அமைத்து, அதன் கதவுகளையும், தாழ்ப்பாள்களையும், குறுக்குச் சட்டங்களையும் அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்.
7
அத்துடன் அவர்களுக்கு அடுத்ததாக கிபியோன், மிஸ்பா ஊர்களின் மனிதர்களால் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. இவர்களுடன் கிபியோனைச் சேர்ந்த மெலெத்தியாவும், மெரொனோத்தியனான யாதோனும் இருந்தார்கள். இவ்விடங்கள் ஐபிராத்து நதியின் மறுபுறத்தில் ஆளுநரின்கீழ் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ஆகும்.
8
அடுத்துள்ள பகுதியை பொற்கொல்லர்களில் ஒருவனான அர்காயாவின் மகன் ஊசியேல் பழுதுபார்த்தான்; அவனைத் தொடர்ந்து நறுமண தைலம் செய்பவர்களுள் ஒருவனான அனனியா திருத்த வேலைகளைச் செய்தான்; இவர்கள் எருசலேமின் அகலமான மதில்வரைக்கும் எருசலேமைப் புதுபித்தார்கள்.
9
அடுத்ததாக எருசலேம் மாவட்டத்தின் பாதிப் பகுதிக்கு ஆளுநனாக இருந்த ஊரின் மகனான ரெப்பாயா திருத்த வேலைகளைச் செய்தான்.
10
அருமாப்பின் மகன் யெதாயா தன் வீட்டுக்கு முன்னுள்ள அடுத்த பகுதியைப் பழுதுபார்த்தான். அவனுக்கு அடுத்ததாக ஆசாப்நெயாவின் மகன் அத்தூஸ் பழுதுபார்த்தான்.
11
இன்னொரு பகுதியையும், சூளைகளின் கோபுரத்தையும், ஆரீமின் மகன் மல்கியாவும், பாகாத் மோவாபின் மகன் அசூபும் பழுது பார்த்தனர்.
12
எருசலேம் மாவட்டத்தின் மற்ற பாதிப் பகுதியின் ஆளுநனான அலோகேசின் மகன் சல்லூம், தனது மகள்களின் உதவியுடன் அடுத்துள்ள பகுதியைப் பழுதுபார்த்தான்.
Settings