லேவியராகமம் 26:23-39
23
“ ‘இப்படியிருக்க, நீங்கள் என் கண்டிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால்,
24
நானும் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக உங்களை ஏழுமடங்காகத் துன்புறுத்துவேன்.
25
என்னுடைய உடன்படிக்கையை நீங்கள் மீறினதினால் உங்களைப் பழிவாங்குவதற்காக வாளை உங்கள்மேல் வரப்பண்ணுவேன். நீங்கள் உங்கள் பட்டணத்திற்குள் பின்வாங்கும்போது உங்களுக்குள் கொள்ளைநோயை அனுப்புவேன். நீங்கள் உங்கள் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
26
உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவை அகற்றிப்போடுவேன். அப்பொழுது பத்துப் பெண்கள் உங்களுக்கான அப்பத்தை ஒரே அடுப்பிலேயே சுடக்கூடியதாய் இருக்கும். அவர்கள் அப்பத்தை நிறைப்படி பங்கிட்டுக் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிடுவீர்கள். ஆனால் திருப்தியடையமாட்டீர்கள்.
27
“ ‘இது இப்படியிருந்தும், நீங்கள் இன்னும் எனக்குச் செவிகொடுக்காமல் தொடர்ந்து என்னுடன் பகைமை பாராட்டினால்,
28
அப்பொழுது நானும் என் கோபத்தில் உங்களுடன் பகைமை பாராட்டி, உங்கள் பாவத்திற்காக ஏழுமடங்கு நானே உங்களைத் தண்டிப்பேன்.
29
நீங்கள் உங்கள் மகன்களுடைய, மகள்களுடைய சதையைச் சாப்பிடுவீர்கள்.
30
உங்கள் மேடைகளை நான் அழித்து, உங்கள் தூபபீடங்களை இடித்து, உங்கள் இறந்த உடல்களை அச்சிலைகளின் உயிரற்ற உருவங்களின்மேல் வைப்பேன். உங்களை நான் அருவருப்பேன்.
31
உங்கள் பட்டணங்களை இடிபாடுகளாக்குவேன். உங்கள் பரிசுத்த இடங்களைப் பாழாக்கிப்போடுவேன். உங்கள் காணிக்கைகளின் மகிழ்ச்சியூட்டும் நறுமணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன்.
32
நான் உங்கள் நாட்டை பாழாக்கிப்போடுவேன். அப்பொழுது அங்கு வாழும் உங்கள் பகைவர்கள் திகைப்படைவார்கள்.
33
நாடுகளுக்குள் உங்களை சிதறப்பண்ணி, என் வாளை உருவி உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவேன். உங்கள் நாடு பாழாக்கப்படும். பட்டணங்களும் இடிபாடுகளாய்க் கிடக்கும்.
34
நீங்கள் உங்கள் பகைவருடைய நாட்டில் இருக்கையில், நாடு பாழாய்க்கிடக்கும். காலமெல்லாம் அது தன் ஓய்வு வருடங்களை அனுபவிக்கும். அப்பொழுது நாடு ஓய்ந்திருந்து, தனது ஓய்வுநாட்களைக் கொண்டாடும்.
35
நாடு பாழாய்க்கிடக்கும் காலமெல்லாம் முன்பு நீங்கள் அதில் வாழ்ந்தபோது, நாடு பெற்றுக்கொள்ளாத ஓய்வு அது இப்பொழுது பெற்றுக்கொள்ளும்.
36
“ ‘உங்களில் மீதமிருப்போரைக் குறித்தோவெனில், அவர்களுடைய பகைவர்களின் நாடுகளில், அவர்களுடைய இருதயங்களைப் பயம் நிறைந்ததாக்குவேன். அப்பொழுது காற்றினால் அடிக்கப்படும் ஒரு இலையின் சத்தங்கூட அவர்களைப் பயந்தோடப்பண்ணும். அவர்கள் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்கள்போல் ஓடுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதபோதும் அவர்கள் விழுவார்கள்.
37
அவர்களை ஒருவரும் துரத்தாதிருந்தும் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்களைப்போல் ஓடி, ஒருவர்மேல் ஒருவர் இடறி விழுவார்கள். இப்படியாக உங்களுக்கு உங்கள் பகைவர்களை எதிர்த்துநிற்க முடியாதிருக்கும்.
38
நீங்கள் நாடுகளுக்குள் அழிந்துபோவீர்கள். உங்கள் பகைவர்களின் நாடு உங்களை விழுங்கும்.
39
உங்களில் மீதமுள்ளவர்கள் தங்கள் பாவத்திற்காகவும், தங்கள் முற்பிதாக்களின் பாவத்திற்காகவும் தங்கள் பகைவர்களின் நாட்டில் உருக்குலைந்து போவார்கள்.
Settings