எரேமியா 37:1-10
1
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின் இடத்தில் அரசாண்டான்.
2
ஆயினும் அவனோ, அவனுடைய வேலையாட்களோ, அந்த நாட்டு மக்களோ, இறைவாக்கினன் எரேமியாவின் மூலம் யெகோவா பேசிய வார்த்தைகளுக்கு எவ்வித கவனமும் செலுத்தவில்லை.
3
அப்படியிருந்தும் சிதேக்கியா அரசன், செலேமியாவின் மகன் யூகாலை, மாசெயாவின் மகனும் ஆசாரியனுமாகிய செப்பனியாவுடன் இறைவாக்கினன் எரேமியாவிடம் அனுப்பி, “தயவுசெய்து நம் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று செய்தி அனுப்பினான்.
4
இப்பொழுது எரேமியாவுக்கு மக்கள் மத்தியில் போய் வரக்கூடிய சுதந்தரம் இருந்தது. ஏனெனில், அவன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.
5
இதற்கிடையில் பார்வோனின் இராணுவம் எகிப்தைவிட்டுப் புறப்பட்டது. எருசலேமை முற்றுகையிட்டிருந்த பாபிலோனியர், எகிப்தியரைப் பற்றிய செய்தியைக் கேட்டபோது எருசலேமைவிட்டு போனார்கள்.
6
அப்பொழுது இறைவாக்கினன் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
7
“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, என்னிடம் விசாரிக்கும்படி உன்னை அனுப்பிய யூதா அரசனிடம் நீ கூறவேண்டியதாவது: ‘உனக்கு உதவிசெய்ய புறப்பட்ட பார்வோனின் இராணுவம், தன் சொந்த நாடாகிய எகிப்திற்குத் திரும்பிப் போய்விடும்.
8
அப்பொழுது பாபிலோனியர் திரும்பிவந்து இப்பட்டணத்தைத் தாக்குவார்கள். அவர்கள் அதைக் கைப்பற்றி எரித்துப் போடுவார்கள்.’
9
“யெகோவா கூறுவது இதுவே: ‘பாபிலோனியர் நிச்சயமாக எம்மைவிட்டுப் போய்விடுவார்கள்’ என எண்ணி உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்.
10
உங்களை தாக்குகிற பாபிலோனிய இராணுவத்தை நீங்கள் முற்றிலும் தோற்கடித்து, அவர்களில் காயப்பட்டவர்கள் மாத்திரம் கூடாரங்களில் மீந்திருந்தாலுங்கூட, அவர்கள் வெளியே வந்து இந்தப் பட்டணத்தை எரித்துவிடுவார்கள்” என்று சொல்லுங்கள் என்றார்.
Settings