Skip to content
எரேமியா 35:1-11

எரேமியா 35:1-11

1
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் ஆட்சி செய்த காலத்தில், யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தையாவது:
2
“ரேகாபியரின் குடும்பத்தாரிடம் போய், அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் பக்க அறைகள் ஒன்றிற்கு வரவழைத்து, அவர்களுக்குக் குடிப்பதற்குத் திராட்சரசம் கொடு” என்றார்.
3
ஆகவே நான் அபசினியாவின் மகனான எரேமியாவின் மகன் யாஸனியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய எல்லா மகன்களுமான ரேகாபியரின் முழு குடும்பத்தாரையும் அழைக்கப் போனேன்.
4
நான் அவர்களை யெகோவாவினுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தேன். அவர்களை அங்குள்ள இறைவனுடைய மனிதனான இக்தாலியாவின் மகனான ஆனானின் மகன்களுடைய அறைக்குக் கொண்டுபோனேன். அந்த அறை, வாசற்காவலனாகிய சல்லூமின் மகன் மாசெயாவின் அறைக்கு மேலிருந்த, அதிகாரிகளுடைய அறைக்கு அடுத்ததாயிருந்தது.
5
அப்பொழுது நான் ரேகாபியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களின் முன்பாக திராட்சரசம் நிறைந்த கிண்ணங்களையும், சில குடங்களையும் வைத்து, “கொஞ்சம் திராட்சரசம் குடியுங்கள்” என்று சொன்னேன்.
6
ஆனால் அவர்களோ, “நாங்கள் திராட்சரசம் குடிப்பதில்லை; ஏனெனில், எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் எங்களிடம், ‘நீங்களாவது உங்கள் சந்ததிகளாவது ஒருபோதும் திராட்சரசம் குடிக்கக்கூடாது’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் எனப் பதிலளித்தனர்.
7
அத்துடன் நீங்கள் ஒருபோதும் வீடுகளைக் கட்டவோ, விதையை விதைக்கவோ, திராட்சைத் தோட்டங்களை நாட்டவோ வேண்டாம். இவற்றில் ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் வேண்டாம். ஆனால் எப்பொழுதும் கூடாரங்களிலேயே வசிக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் நாடோடிகளாய் இருக்கும் நாட்டில் நீடித்த நாட்களுக்கு வாழ்வீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள்.
8
நாங்கள் எங்கள் முற்பிதாவான ரேகாபின் மகன் யோனதாப் கட்டளையிட்ட எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருக்கிறோம். நாங்களோ, எங்கள் மனைவிகளோ, எங்கள் மகன்களோ, மகள்களோ ஒருபோதும் திராட்சரசம் குடித்ததில்லை.
9
நாங்கள் வாழ்வதற்கென்று வீடுகளைக் கட்டவுமில்லை. திராட்சை தோட்டங்களையோ, வயல்களையோ, பயிர்களையோ உண்டாக்கவும் இல்லை.
10
நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் முற்பிதா யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றுக்கும் முழுவதும் கீழ்ப்படிந்திருந்தோம்.
11
ஆனால் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் இந்த நாட்டின்மேல் படையெடுத்தபோது நாங்கள், ‘பாபிலோனிய, சீரியப் படைகளிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக நாம் எருசலேமுக்குப் போகவேண்டும்’ என்று சொன்னோம். அப்படியே நாங்கள் எருசலேமுக்கு வந்தோம்” என்று கூறினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options