ஏசாயா 65:17-25
17
“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் உண்டாக்குவேன். முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை, மனதில் தோன்றுவதுமில்லை.
18
நான் உண்டாக்கப்போகிறதில் நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும், அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
19
நானும் எருசலேமில் மகிழ்ந்து, எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்; அங்கு புலம்பலின் குரலும், அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
20
“ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள். நூறு வயதில் இறக்கிறவன் வாலிபன் என்று எண்ணப்படுவான்; பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான்.
21
அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி, அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
22
அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள். ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும். நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில் நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.
23
அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்; அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
24
அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
25
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும், பாம்போ புழுதியைத் தின்னும். எனது பரிசுத்த மலையெங்கும் அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது” என்று யெகோவா சொல்கிறார்.
Settings