ஏசாயா 48:1-8
1
“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே, யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே, யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்; நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்; ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.
2
நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்; சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர்.
3
முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன். பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
4
நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும், உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன்.
5
ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன். ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன; எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’ என்று நீ சொல்லமுடியாது.
6
இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ? “இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன், இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.
7
அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன; நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’ என்று உன்னால் சொல்லமுடியாது.
8
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை. நீ எவ்வளவு துரோகி, பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.
Settings