Skip to content
எசேக்கியேல் 37:16-28

எசேக்கியேல் 37:16-28

16
“மனுபுத்திரனே, நீ ஒரு தடியை எடுத்து, ‘இது யூதாவுக்கும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேலருக்கும் சொந்தமானது’ என அதில் எழுது. பின்பு வேறொரு தடியை எடுத்து, ‘இது எப்பிராயீமின் தடி; இது யோசேப்புக்கும் அவனோடு கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் குடும்பத்தார் எல்லோருக்கும் சொந்தமானது’ என அதில் எழுது.
17
அதன்பின் அவை உனது கையில் ஒன்றாகும்படி அவைகளை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு தடியாக இணை.
18
“இதனால் நீ எதைக் கருதுகிறாய்? ‘நமக்குக் கூறமாட்டாயா?’ என உன் நாட்டவர் உன்னைக் கேட்கும்போது,
19
நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; நான் எப்பிராயீமுக்கும், அதைக் கூட்டுச்சேர்ந்திருக்கும் இஸ்ரயேல் கோத்திரங்களுக்கும் உரிய யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடு இணைத்து, ஒரே கோலாக்குவேன். அவைகள் என் கரத்தில் ஒன்றாயிருக்கும்.’
20
நீ எழுதிய அந்த கோல்ககளை அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பிடித்து,
21
அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் இஸ்ரயேலரை அவர்கள் போயிருக்கும் நாடுகளிடையேயிருந்து வருவிப்பேன். நான் அவர்களை எல்லா இடங்களிலுமிருந்தும் ஒன்றுதிரட்டி, மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டுக்கே கொண்டுவருவேன்.
22
நான் அவர்களை இஸ்ரயேலின் மலைகளிலும் நிலப்பரப்பிலும் ஒரே நாடாக்குவேன். அங்கே இனியொருபோதும் இரு நாடுகள் இருப்பதில்லை. இரு அரசுகளாக பிரிக்கப்படுவதுமில்லை. அவர்கள் எல்லோர்மேலும் ஒரே அரசனே ஆளுகை செய்வான்.
23
அவர்கள் தங்கள் விக்கிரகங்களாலோ, வெறுக்கத்தக்க உருவச் சிலைகளாலோ அல்லது எந்தவொரு குற்றச் செயல்களாலோ இனியொருபோதும் தங்களை கறைப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களைப் பின்னடையச்செய்யும் எல்லா பாவங்களினின்றும் நான் அவர்களை விடுவித்து, அவர்களைச் சுத்திகரிப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்கள் இறைவனாயிருப்பேன்.
24
“ ‘என் அடியவனாகிய தாவீது அவர்களின் அரசனாயிருப்பான். அவர்கள் அனைவரும் ஒரே மேய்ப்பனைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எனது சட்டங்களைப் பின்பற்றி, என் விதிமுறைகளைக் கைக்கொள்ளக் கவனமாயிருப்பார்கள்.
25
நான் என் அடியவனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் முற்பிதாக்கள் வாழ்ந்ததுமாகிய நாட்டிலே அவர்கள் குடியிருப்பார்கள். அவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள். என் அடியவனான தாவீது என்றென்றும் அவர்களுடைய இளவரசனாக இருப்பான்.
26
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கையொன்றைச் செய்வேன். அது ஒரு நித்திய உடன்படிக்கையாயிருக்கும். நான் அவர்களை நிலைநிறுத்தி, அவர்களுடைய எண்ணிக்கையைப் பெருகப்பண்ணி, என்றென்றைக்கும் என் பரிசுத்த ஆலயத்தை அவர்கள் மத்தியில் வைப்பேன்.
27
எனது இருப்பிடம் அவர்களோடிருக்கும். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.
28
எனது பரிசுத்த ஆலயம் என்றென்றும் அவர்கள் மத்தியில் இருக்கும்போது, யெகோவாவாகிய நானே இஸ்ரயேலைப் பரிசுத்தம் பண்ணுகிறவர் என்று பிற தேசத்தார்கள் அறிந்துகொள்வார்கள்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options