எசேக்கியேல் 34:1-10
1
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2
“மனுபுத்திரனே, இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு விரோதமாக இறைவாக்கு உரை; நீ இறைவாக்குரைத்து அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: தங்களைக்குறித்து மட்டுமே கவனம் எடுக்கும் இஸ்ரயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு, மேய்ப்பர்கள் மந்தையில் கவனம் எடுக்க வேண்டுமல்லவோ?
3
நீங்கள் தயிரைச் சாப்பிட்டுக் கம்பளி உடைகளை உடுத்தி, சிறந்த மிருகங்களையும் அடித்துச் சாப்பிடுகிறீர்கள். ஆனால், மந்தையையோ நீங்கள் கவனிக்காது இருக்கிறீர்கள்.
4
நீங்கள் பெலவீனமானவைகளைப் பெலப்படுத்தவில்லை. நோயுள்ளவைகளைச் சுகப்படுத்தவுமில்லை. காயமுற்றவைகளுக்குக் கட்டுப்போடவுமில்லை. நீங்கள் வழிவிலகிப் போனவைகளைத் திருப்பிக்கொண்டு வரவில்லை. காணாமற்போனவற்றைத் தேடிப்போகவுமில்லை. அவைகளைக் கடுமையாகவும், கொடுமையாகவும் நடத்தினீர்கள்.
5
மேய்ப்பன் அங்கு இல்லாதபடியால் அவை சிதறிப்போயின. அவை சிதறியபோது காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின.
6
எனது செம்மறியாடுகள் எல்லா மலைகளிலும், ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. அவை பூமியின்மீதெங்கும் சிதறிப்போயின. அவைகளைத் தேடுவதற்கோ கவனிப்பதற்கோ ஒருவருமே இருக்கவில்லை.
7
“ ‘ஆகவே மேய்ப்பர்களே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
8
நான் வாழ்வது நிச்சயம்போலவே, என் மந்தைக்கு மேய்ப்பனொருவன் இல்லாத காரணத்தால் அவை களவாடப்பட்டன. அவை காட்டு மிருகங்களுக்கெல்லாம் உணவாயின. என் மேய்ப்பர்கள் என் மந்தையைத் தேடாமல் என் மந்தையைப் பார்க்கிலும் தங்களையே கவனிக்கிறார்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
9
ஆகவே மேய்ப்பர்களே, யெகோவாவினுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
10
ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.
Settings