எசேக்கியேல் 33:24-29
24
“மனுபுத்திரனே, இஸ்ரயேல் நாட்டில் அழிவு ஏற்பட்ட நகரங்களில் எஞ்சி வாழும் மக்கள், ‘ஆபிரகாம் ஒரே ஒரு மனிதனாக இருந்தும் முழு நாட்டையும் உரிமையாக்கிக் கொண்டானே; நாங்களோ அநேகராய் இருக்கிறோம். நிச்சயமாக இப்பொழுது நாடு எங்களுக்கு உரிமையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லவா’ என்கிறார்கள்.
25
ஆகவே, நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிடுவதுடன், விக்கிரகங்களை நம்பி இரத்தமும் சிந்துகிறீர்கள். அப்படியிருக்க நாடு உங்களது உரிமையாகலாமோ?
26
நீங்கள் உங்கள் வாளிலே நம்பிக்கை வைக்கிறீர்கள். வெறுக்கத்தக்க காரியங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?’ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
27
“இதையும் அவர்களிடம் சொல். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் வாழ்வது நிச்சயம்போல, அழிவு ஏற்பட்ட நகரங்களில் விடப்பட்டவர்கள் வாளினால் சாவார்கள். நாட்டில் வெளியிடங்களில் இருப்பவர்களைக் காட்டு மிருகங்களுக்கு விழுங்கும்படி கொடுப்பேன். பலத்த கோட்டைகளிலும் குகைகளிலும் மறைந்திருப்போர் கொள்ளைநோயினால் சாவார்கள் என்பதும் நிச்சயம்.
28
நான் நாட்டைப் பாழாக்குவேன். அப்பொழுது அதன் பெருமையான பலம் ஒரு முடிவுக்கு வரும். அப்பொழுது அதன் வழியால் ஒருவனும் கடக்கமுடியாதபடி இஸ்ரயேலின் மலைகள் பாழாகும்.
29
அவர்கள் செய்த வெறுக்கத்தக்க காரியங்களினிமித்தம் நான் நாட்டைப் பாழடையச்செய்யும்போது, நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’
Settings