எசேக்கியேல் 28:11-19
11
பின்னும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
12
“மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘நீ ஞானத்தால் நிறைந்து, அழகில் முழுநிறைவுபெற்று, முழுநிறைவின் மாதிரியாய்த் திகழ்ந்தாய்.
13
இறைவனின் தோட்டமாகிய ஏதேனில் நீ இருந்தாய். சிவப்பு இரத்தினம், புஷ்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகிய அத்தனை விலைமதிப்புள்ள கற்களும் உன்னை அலங்கரித்தன. இவை எல்லாம் தங்க வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தன. நீ உண்டாக்கப்பட்ட நாளிலேயே அவை ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன.
14
நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய். ஏனெனில் அப்படியே நான் உன்னை நியமித்தேன். இறைவனின் பரிசுத்த மலையில் நீ இருந்தாய். நெருப்புக்கனல் வீசும் கற்களிடையே நீ நடந்தாய்.
15
நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி, கொடுமை உன்னில் காணப்படுமட்டும் உன்னுடைய வழிகளில் நீ குற்றமற்றிருந்தாய்.
16
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், நீ கொடுமை நிறைந்தவனாகிப் பாவம் செய்தாய். ஆகவே, காவல்காக்கும் கேருபே, இவ்விதமாய் நான் உன்னை நெருப்புக்கனல் வீசும் கற்களினிடையிலிருந்து வெளியேற்றினேன். நான் உன்னை இறைவனின் மலையிலிருந்து அவமானத்தோடு துரத்திவிட்டேன்.
17
உன் அழகினிமித்தம் உன் இருதயம் பெருமைகொண்டது, உன் செல்வச் சிறப்பின் காரணத்தால் உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய். ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன். அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
18
உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும் பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய். ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன். அது உன்னைச் சுட்டெரித்தது. மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.
19
உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு திகைத்தார்கள். உனக்கு ஒரு பயங்கரமான முடிவு வந்துவிட்டது. நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”
Settings