Tsallake zuwa abun ciki
எசேக்கியேல் 22:2-16

எசேக்கியேல் 22:2-16

2
“மனுபுத்திரனே, எருசலேமை நியாயந்தீர்ப்பாயோ? இரத்தம் சிந்தும் இந்த நகரத்தை நீ நியாயந்தீர்ப்பாயோ? அப்படியானால் அவளுடைய அருவருக்கத்தக்க செயல்கள் அனைத்தையும் நீ அவளுக்கு எடுத்துக்காட்டி,
3
அவளிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, உன் மத்தியில் இரத்தம் சிந்துவதால் உனக்கே கேடு வரச்செய்து,’ விக்கிரகங்களை உண்டுபண்ணுவதால் உன்னையே கறைப்படுத்திக்கொள்ளும் நகரமே,
4
நீ சிந்திய இரத்தத்தினால் குற்றமுள்ளவள் ஆனாய். நீ செய்த விக்கிரகங்களினால் கறைப்பட்டாய். நீ உன் நாட்களை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாய். உன் வருடங்களுக்கும் முடிவு வந்துவிட்டது. ஆகவே, நான் உன்னை நாடுகளின் இழிவுபடுத்தும் பொருளாகவும், எல்லா நாடுகளுக்கும் உன்னைக் கேலிக்கு இடமாக்குவேன்.
5
பெயர் கெட்டுப்போன, கலகம் நிறைந்த நகரமே, உனக்கு அருகிலும் தொலைவிலும் உள்ளவர்கள் உன்னை கேலி செய்வார்கள்.
6
“ ‘உன்னிடத்தில் வாழும் இஸ்ரயேல் இளவரசன் ஒவ்வொருவனும், இரத்தம் சிந்துவதற்காகத் தன் வல்லமையை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்று பார்!’
7
உன்னிடத்தில் வாழும் மக்கள் தாய் தந்தையரை அவமதித்தார்கள். அயல்நாட்டினரை ஒடுக்கினார்கள். தந்தையற்றவனையும் விதவையையும் கேவலமாய் நடத்தினார்கள்.
8
எனது பரிசுத்த உடைமைகளை நீ அசட்டை செய்து, என் ஓய்வுநாட்களையும் தூய்மைக்கேடாக்கினாய்.
9
இரத்தம் சிந்தும் நோக்குடன் அவதூறு பேசுவோர் உன்னிடத்தில் உண்டு. மலைகளிலுள்ள வழிபாட்டிடங்களில் சாப்பிடுவோரும், இழிவான செயல்களில் ஈடுபடுவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்.
10
தங்கள் தந்தையின் மனைவிகளுடன் உடலுறவுகொண்டு, தந்தையரை அவமானப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். பெண்களின் மாதவிடாய் நேரத்தில், அவர்கள் சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருக்கையில், அவர்களைப் பலவந்தப்படுத்துவோரும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்.
11
ஒருவன் தன் அயலானின் மனைவியுடன் வெறுக்கத்தக்க குற்றம் புரிகிறான். இன்னொருவன் வெட்கமின்றித் தன் மருமகளை வெட்கக்கேடாய் கறைப்படுத்துகிறான். இன்னொருவன் தன் சொந்தத் தகப்பனின் மகளாகிய தனது சகோதரியையே பலவந்தம்பண்ணுகிறான். இப்படியானவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்.
12
இலஞ்சம் வாங்கி, இரத்தம் சிந்துகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள். நீ அதிக வட்டி வாங்குகிறாய். அதிக இலாபத்தையும் நாடுகிறாய். உன் அயலானை வற்புறுத்தி அவனிடமிருந்து அநியாய இலாபத்தைப் பெறுகிறாய். என்னையும் மறந்துபோனாய் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
13
“ ‘நீ அநீதியாய் இலாபம் சம்பாதித்த பொருட்களுக்காகவும், உன் மத்தியில் இரத்தம் சிந்தியமைக்காகவும் நான் சீற்றத்துடன் என் கரங்களைச் சேர்த்து அடிப்பேன்.
14
நான் உன்னைத் தண்டிக்கும் நாளிலே உன் தைரியம் நிலைத்திருக்குமோ? அல்லது உன் கைகள் பெலனாய் இருக்குமோ? யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன். நானே இதைச் செய்வேன்.
15
நான் உன்னை நாடுகளுக்குள் சிதறுண்டு போகப்பண்ணுவேன். நாடுகளுக்குள்ள உன்னைச் சிதறடிப்பேன். உன் தூய்மையற்ற தன்மைக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
16
பல நாடுகளின் பார்வையிலும் நீ கறைப்பட்டிருக்கும்போது, நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய்’ ” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options