எசேக்கியேல் 20:27-32
27
“ஆகையால், மனுபுத்திரனே, இஸ்ரயேல் மக்களிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே; உங்கள் தந்தையர் தொடர்ந்து என்னைக் கைவிட்டு என்னை நிந்தித்தார்கள்.
28
அவர்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட இந்த நாட்டுக்கு நான் அவர்களைக் கொண்டுவந்தபோது, அவர்கள் எங்கேயாவது உயர்ந்த மலையையோ, செழுமையான மரத்தையோ கண்டவுடன், அங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். தங்கள் காணிக்கைகளைப் படைத்து எனக்குக் கோபமூட்டினார்கள். நறுமண தூபங்களையும் பானபலிகளையும் அங்கே செலுத்தினார்கள்.
29
அப்பொழுது நான் அவர்களிடம் நீங்கள் போகும் அந்த வழிபாட்டு மேடு என்ன?’ ” என்று கேட்டேன். அது இந்நாள்வரைக்கும் பாமா எனப்படுகிறது.
30
“ஆகையால், நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே,’ உங்களைக் கறைப்படுத்துவீர்களோ? அவர்களுடைய இழிவான உருவச் சிலைகளில் ஆசைகொண்டு வணங்குவீர்களோ?
31
நீங்கள் உங்கள் மகன்களை நெருப்பில் பலியிட்டு, உங்கள் காணிக்கைகளைச் செலுத்துவதனால், நீங்களே தொடர்ந்து உங்களைக் கறைப்படுத்தி வருகிறீர்கள். அப்படியிருக்க இஸ்ரயேல் குடும்பத்தாரே! நீங்கள் என்னிடம் விசாரித்துக் கேட்பதற்கு நான் இடமளிக்க வேண்டுமோ? உதவிசெய்ய வேண்டுமோ? நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீங்கள் என்னிடம் விசாரிக்க நான் இடமளிக்கமாட்டேன் என்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
32
“ ‘ “மரத்திற்கும், கல்லுக்கும் பணிசெய்யும் நாடுகளைப்போலவும், உலகத்தின் மக்கள் கூட்டங்களைப்போலவும் நாங்களும் இருக்க விரும்புகிறோம்” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் மனதிலுள்ளவைகள் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.
Settings