யாத்திராகமம் 9:13-21
13
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அதிகாலையில் எழுந்து பார்வோனின் எதிரில் போய் அவனிடம், எபிரெயரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘என் மக்கள் என்னை வழிபடுவதற்கு அவர்களைப் போகவிடு.
14
இல்லையென்றால் இம்முறை உனக்கும், உன் அதிகாரிகளுக்கும், உன் நாட்டு மக்களுக்கும் எதிராக எனது வாதைகளின் முழு தாக்கத்தையும் அனுப்புவேன். இதனால் பூமியெங்கும் எனக்கு நிகரானவர் யாருமே இல்லை என்பதை நீ அறிந்துகொள்வாய்.
15
ஏனெனில், நான் நினைத்திருந்தால் என் கரத்தை நீட்டி, பூமியிலிருந்து உங்களை முற்றிலும் அழித்துப்போடும் வாதை ஒன்றினால் உன்னையும் உன் மக்களையும் அப்பொழுதே அடித்திருப்பேன்.
16
ஆனாலும் நான் என் வல்லமையை உனக்குக் காட்டி, பூமியெங்கும் என்னுடைய பெயரை அறிவிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே நான் உன்னை உயர்த்தினேன்.
17
நீயோ இன்னும் என்னுடைய மக்களுக்கு விரோதமாய் இருந்து, அவர்களைப் போகவிடாமல் இருக்கிறாய்.
18
ஆதலால் நாளை இதே நேரத்தில், எகிப்து நாடு உண்டானதுமுதல் இன்றுவரை அங்கே ஒருபோதும் விழுந்திராத மிகக் கடுமையான ஆலங்கட்டி மழையை அனுப்புவேன்.
19
ஆகையால், இப்பொழுதே உன் வளர்ப்பு மிருகங்களையும், வயல்வெளியிலிருக்கும் உனக்குச் சொந்தமான மற்ற யாவற்றையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவரும்படி உத்தரவு கொடு. ஏனெனில் உள்ளே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் எல்லா மனிதர்மேலும், மிருகங்கள்மேலும் பனிக்கட்டிகள் விழும். அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என்று சொல்” என்றார்.
20
யெகோவாவின் வார்த்தைக்குப் பயந்த பார்வோனின் அதிகாரிகள் தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் உள்ளே கொண்டுவருவதற்கு விரைந்து சென்றனர்.
21
யெகோவாவினுடைய வார்த்தையை அலட்சியப் படுத்தியவர்களோ, தங்கள் அடிமைகளையும், வளர்ப்பு மிருகங்களையும் வெளியிலே விட்டுவிட்டார்கள்.
Settings