Skip to content
யாத்திராகமம் 8:1-15

யாத்திராகமம் 8:1-15

1
அதன்பின் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ பார்வோனிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போகவிடு.
2
நீ அவர்களைப் போகவிட மறுத்தால், உன் நாடு முழுவதையும் தவளைகளினால் வாதிப்பேன்.
3
நைல் நதி தவளைகளால் நிரம்பும். அவை உன் அரண்மனைக்குள்ளும் உன் படுக்கையறைக்குள்ளும், உன் கட்டிலின்மேலும், உன் அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும், உன் மக்கள்மேலும், உன் அடுப்புகளுக்குள்ளும், மாப்பிசையும் பாத்திரங்களுக்குள்ளும் வந்து ஏறும்.
4
தவளைகள் உன்மேலும், உன் நாட்டு மக்கள்மேலும், உன் அதிகாரிகள்மேலும் வந்து ஏறும்’ என்று சொல்” என்றார்.
5
பின்னும் யெகோவா மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்லவேண்டியதாவது, ‘நீ உன் கோலை எடுத்து, உனது கையை நீரோடைகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரும்படி செய்’ என்று சொல்” என்றார்.
6
அப்படியே ஆரோன் எகிப்திலுள்ள நீர் நிலைகள்மேல் தன் கையை நீட்டினான். அப்போது தவளைகள் வந்து, நாட்டை மூடிக்கொண்டன.
7
ஆனால் எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்து, எகிப்து நாட்டின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள்.
8
அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “இந்தத் தவளைகள் என்னையும் என் நாட்டு மக்களையும் விட்டு நீங்கும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அப்பொழுது நான் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்த உங்கள் மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
9
மோசே பார்வோனிடம், “தவளைகள் உம்மிடத்திலிருந்தும் உமது வீடுகளிலிருந்தும் நீங்கும்படி, உமக்காகவும் உமது அதிகாரிகளுக்காகவும் உமது மக்களுக்காகவும் நான் மன்றாடுவேன். ஆனால் அதற்கான நேரத்தை நீரே தீர்மானித்து எனக்குத் தெரியப்படுத்தும். நைல் நதியில் மட்டும் தவளைகள் இருக்கும்” என்றான்.
10
அதற்குப் பார்வோன், “நாளைக்கே மன்றாடு” என்றான். அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே ஆகும். அப்பொழுது எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நிகரானவர் யாரும் இல்லையென்று நீர் அறிந்துகொள்வீர்.
11
தவளைகள் உம்மையும், உமது வீடுகளையும், அதிகாரிகளையும், மக்களையும் விட்டு நீங்கிவிடும்; ஆனால் நைல் நதியில் மட்டும் இருக்கும்” என்றான்.
12
மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து போனபின், பார்வோன்மேல் யெகோவா கொண்டுவந்த தவளைகளைக் குறித்து, மோசே அவரை நோக்கி மன்றாடினான்.
13
யெகோவா மோசே கேட்டபடியே செய்தார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலுமுள்ள தவளைகளெல்லாம் செத்துப்போயின.
14
தவளைகள் குவியலாகக் குவிக்கப்பட்டன. அதனால் நாடெங்கும் துர்நாற்றமெடுத்தது.
15
துயரம் நீங்கியதை பார்வோன் கண்டதும், யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்தபடியே, அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மோசேக்கும் ஆரோனுக்கும் செவிகொடுக்கவில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options