யாத்திராகமம் 26:1-14
1
இறைசமுகக் கூடாரத்தைப் பத்து மூடுதிரைகளைக் கொண்டு செய்யவேண்டும். அத்திரைகள் தரமாகத் திரித்த மென்பட்டு, நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல் ஆகியவற்றைக்கொண்டு நெய்யப்பட்டிருக்க வேண்டும். சிறந்த தொழில் வல்லுநரால் அதில் கேருபீன்களின் உருவம் சித்திர வேலையாய் செய்யப்படவேண்டும்.
2
எல்லா திரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும் அளவுள்ளதாய் இருக்கவேண்டும்.
3
அதில் ஐந்து திரைகளை ஒன்றாக இணை, மற்ற ஐந்து திரைகளுக்கும் அப்படியே செய்யவேண்டும்.
4
இணைக்கப்பட்ட ஒரு தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பில் நீலநிறத் துணியினால் வளையங்களைச் செய்யவேண்டும். மற்ற தொகுப்புத் திரையின் கடைசி விளிம்பிலும் அப்படியே செய்யவேண்டும்.
5
ஒரு திரையில் ஐம்பது வளையங்களைச் செய்; மற்றத் தொகுப்பு திரையின் கடைசியிலும் ஐம்பது வளையங்களைச் செய்யவேண்டும். அந்த வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிரெதிராய் இருக்கவேண்டும்.
6
பின்பு தங்கத்தினால் ஐம்பது கொக்கிகளைச் செய், இந்த இறைசமுகக் கூடாரம் ஒரே இணைப்பாக இருக்கும்படி, இரண்டு தொகுப்பு திரைகளையும் ஒன்றாக இணைப்பதற்கு இக்கொக்கிகளைப் பயன்படுத்து.
7
இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரினால் பதினோரு திரைகளைச் செய்யவேண்டும்.
8
அந்த பதினோரு திரைகளும் ஒரே அளவாய் இருக்கவேண்டும். ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும் நான்கு முழம் அகலமும் உடையதாய் இருக்கவேண்டும்.
9
இவற்றில் ஐந்து திரைகளை ஒரு தொகுப்பாகவும், மற்ற ஆறு திரைகளையும் இன்னொரு தொகுப்பாக ஒன்றிணைக்கவேண்டும். ஆறாவது திரையை கூடாரத்தின் முன்பகுதியில் இரண்டாக மடித்துப்போடவேண்டும்.
10
ஒரு தொகுப்பு திரையில் கடைசி திரையின் விளிம்பு நெடுகிலும், ஐம்பது வளையங்கள் செய்யவேண்டும். மற்ற தொகுப்பு திரையின் கடைசி விளிம்பு நெடுகிலும் அப்படியே செய்யவேண்டும்.
11
அதன்பின் ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கூடாரத்தை ஒரே பகுதியாக இணைப்பதற்கு அந்த வளையங்களில் அந்தக் கொக்கிகளைப் போடு.
12
கூடாரத்திரைகளின் மீதமுள்ள கூடுதலான நீளத்தைப் பொறுத்தவரையில், விடப்பட்ட பாதி திரையை இறைசமுகக் கூடாரத்தின் பின்பக்கத்தில் தொங்கவிட வேண்டும்.
13
கூடாரத்திரைகளின் நீளம் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு முழம் கூடுதலாக இருக்கும். மீதமிருப்பது இறைசமுகக் கூடாரத்தை மூடும்படியாக இரண்டு பக்கங்களிலும் தொங்கும்.
14
அக்கூடாரத்திற்காக மூடுதிரையை, சிவப்புச் சாயம் தோய்த்த செம்மறியாட்டுக் கடாவின் தோலினால் செய்யவேண்டும். அதற்கு மேலாகப் போடுவதற்காக, கடல்பசுத் தோலினால் மற்றொரு மூடுதிரையைச் செய்யவேண்டும்.
Settings