உபாகமம் 7:17-26
17
“எங்களிலும் இந்த நாடுகள் வலிமையானவர்கள், எப்படி அவர்களை எங்களால் துரத்தமுடியும்” என்று நீங்கள் உங்களுக்குள்ளே சொல்லக்கூடும்.
18
ஆனால் நீங்கள் அவர்களுக்குப் பயப்படவேண்டாம். பார்வோனுக்கும், எகிப்து நாடு முழுவதற்கும் உங்கள் இறைவனாகிய யெகோவா செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
19
உங்கள் இறைவனாகிய யெகோவா செய்த கொடிய துன்பங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும், அவருடைய வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களை வெளியே கொண்டுவந்ததை நீங்கள் உங்கள் கண்களினாலேயே கண்டீர்கள். நீங்கள் பயப்படும் எந்த மக்கள் கூட்டத்துக்கும், உங்கள் இறைவனாகிய யெகோவா அப்படியே செய்வார்.
20
மேலும், உங்கள் இறைவனாகிய யெகோவா, பகைவர்களில் உங்களுக்கு மறைந்து தப்பியிருக்கிறவர்களும் அழியும்வரை, அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார்.
21
அவர்களினால் நீங்கள் திகிலடையவேண்டாம். ஏனெனில், உங்கள் மத்தியில் இருக்கும் உங்கள் இறைவனாகிய யெகோவா பயத்திற்குரிய மகத்துவமான இறைவன்.
22
உங்கள் இறைவனாகிய யெகோவா அந்த நாடுகளை உங்களைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவிடுவார். நீங்கள் அவர்களை முழுவதும் உடனடியாக அழிக்கவேண்டாம். அப்படிச் செய்தால் காட்டு மிருகங்கள் உங்களுக்கிடையே பெருகிவிடும்.
23
உங்கள் இறைவனாகிய யெகோவாவோ அவர்களை உங்களிடம் ஒப்படைத்து, அவர்கள் அழிந்துபோகும்வரை அவர்களைப் பெரிதும் கலங்கடிப்பார்.
24
அவர்களுடைய அரசர்களை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்களுடைய பெயர்களை வானத்தின்கீழ் இல்லாதபடி அழித்துப்போடுவார். உங்களை எதிர்த்து எழுந்துநிற்க ஒருவராலும் முடியாது; நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள்.
25
அவர்களுடைய தெய்வங்களின் உருவச்சிலைகளை நெருப்பினால் எரிக்கவேண்டும். அவற்றில் இருக்கும் தங்கத்தையோ வெள்ளியையோ அபகரிக்க ஆசைகொள்ளவேண்டாம். அவற்றை உங்களுக்காக எடுத்துக்கொள்ளவும் வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அது உங்களுக்குக் கண்ணியாய் இருக்கும், அது உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானது.
26
அவருக்கு அருவருப்பானது எதையும் உங்கள் வீட்டிற்குள் கொண்டுவர வேண்டாம், ஏனெனில் அவைகளைப்போலவே நீங்களும் அழிவுக்கு நியமிக்கப்படுவீர்கள். அவற்றை முற்றிலுமாக வெறுத்து அருவருத்து விலக்கிவிடுங்கள், ஏனெனில் அவை அழிவுக்கே நியமிக்கப்பட்டிருக்கின்றன.
Settings