Skip to content
உபாகமம் 28:15-48

உபாகமம் 28:15-48

15
ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் கவனமாய்ப் பின்பற்றாமலும்போனால், இந்த சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வந்து, உங்களை பிடித்துக்கொள்ளும்:
16
நீங்கள் பட்டணத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் சபிக்கப்படுவீர்கள்.
17
உங்களுடைய அறுவடையின் கூடையும், மா பிசையும் பாத்திரமும் சபிக்கப்படும்.
18
உங்கள் கர்ப்பத்தின் கனி சபிக்கப்படும், நிலத்தின் பயிர்வகைகளும், மாட்டு மந்தையின் கன்றுகளும், ஆட்டு மந்தையின் குட்டிகளும் சபிக்கப்படும்.
19
நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள்.
20
யெகோவா உங்கள்மேல் சாபங்களை அனுப்புவார், உங்களுடைய கையின் வேலைகள் எல்லாவற்றின்மேலும் கலகத்தையும், கண்டனத்தையும் அனுப்புவார். நீங்கள் அவரைக் கைவிட்ட அந்த தீமையான செயலின் நிமித்தம் திடீரென அழிந்து பாழாய்போகும் வரைக்கும், இவற்றை உங்கள்மேல் அனுப்புவார்.
21
யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலிருந்து நீங்கள் அழிந்துபோகும்வரை உங்களை நோய்களால் வாதிப்பார்.
22
யெகோவா உங்களை உடலுருக்கும் நோயினாலும், காய்ச்சலினாலும், வீக்கத்தினாலும், கொப்பளிக்கும் வெப்பத்தினாலும், வறட்சியினாலும், தாவர நோயினாலும், விஷப்பனியினாலும் தாக்குவார். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களை வாதிக்கும்.
23
உங்களுக்கு மேலாக இருக்கும் வானம் வெண்கலமாயும், உங்களுக்குக் கீழிருக்கும் நிலம் இரும்பாயும் இருக்கும்.
24
யெகோவா உங்கள் நாட்டில் தூசியையும், புழுதியையுமே மழைக்குப் பதிலாகப் பெய்யச்செய்வார். நீங்கள் அழியும்வரை அவை வானத்திலிருந்து வந்துகொண்டிருக்கும்.
25
யெகோவா உங்கள் பகைவர்களுக்கு முன்னே உங்களைத் தோல்வி அடையப்பண்ணுவார். ஒரு திசையிலிருந்து அவர்களை எதிர்த்து வருவீர்கள். ஆனால் அவர்களைவிட்டு ஏழு திசைகளில் ஓடுவீர்கள். பூமியிலுள்ள எல்லா அரசுகளுக்கும் நீங்கள் ஒரு பயங்கரக் காட்சியாய் இருப்பீர்கள்.
26
உங்கள் பிரேதங்கள், எல்லா ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் எல்லா மிருகங்களுக்கும் உணவாகும். அவற்றைப் பயமுறுத்தித் துரத்திவிட யாரும் இரார்.
27
சுகமடைய முடியாதபடி யெகோவா உங்களை எகிப்தின் கொப்புளங்களினாலும், பருக்களின் கட்டிகளினாலும், சீழ்வடியும் புண்களினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.
28
யெகோவா உங்களைப் பைத்தியத்தினாலும், குருட்டுத்தன்மையினாலும், மனோவியாதியினாலும் வாதிப்பார்.
29
குருடன் இரவில் தடவித்திரிவதுபோல், நீங்கள் நடுப்பகலில் தடவித்திரிவீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் தோல்வி அடைவீர்கள். நாள்தோறும் நீங்கள் ஒடுக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்படுவீர்கள். ஒருவரும் உங்களை விடுவிக்கமாட்டார்கள்.
30
உங்களுக்கு ஒரு பெண் திருமணம் செய்ய நிச்சயிக்கப்படும். வேறொருவனோ அவளைக் கொண்டுபோய் கற்பழிப்பான். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டுவீர்கள். அதில் வேறொருவன் குடியிருப்பான். நீங்கள் ஒரு திராட்சைத் தோட்டத்தை நாட்டுவீர்கள், அதன் பழத்தையோ சுவைக்கத் தொடங்கவும்மாட்டீர்கள்.
31
உங்கள் கண்களுக்கு முன்னால் உங்கள் மாடுகள் கொல்லப்படும். ஆனால் அதில் ஒன்றையும் நீங்கள் சாப்பிடமாட்டீர்கள். உங்கள் கழுதை உங்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்படும். அது திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது. உங்கள் செம்மறியாடுகள் உங்கள் பகைவர்களிடம் கொடுக்கப்படும். அவற்றை யாரும் தப்புவிக்கமாட்டார்கள்.
32
உங்கள் மகன்களும், மகள்களும் வேறு நாட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவார்கள். நீங்களோ அவர்களுக்காக நாள்தோறும் காத்திருந்து கண்களை பூத்துப்போகச்செய்வீர்கள். அதைக் கை நீட்டித் தடுக்கவும் வலிமையற்றவர்களாய் இருப்பீர்கள்.
33
உங்கள் நிலமும், உங்கள் முயற்சியும் விளைவித்த பலனை, நீங்கள் அறியாத மக்கள் சாப்பிடுவார்கள். உங்கள் வாழ்நாளெல்லாம் கொடுமையான ஒடுக்குதலைத்தவிர, வேறொன்றும் உங்களுக்குக் கிடைக்காது.
34
நீங்கள் காணும் இக்காட்சிகள், உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக்கும்.
35
யெகோவா உங்கள் முழங்கால்களையும், கால்களையும் குணமாக்கமுடியாதபடி வேதனை நிறைந்த கொப்புளங்களால் வாதிப்பார். அவை உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை பரவும்.
36
யெகோவா உங்களையும், நீங்கள் உங்களுக்கென்று ஏற்படுத்துகிற அரசனையும், நீங்களோ, உங்கள் முற்பிதாக்களோ அறியாத ஒரு நாட்டவரிடம் துரத்துவார். அங்கே நீங்கள் மரத்தாலும், கல்லாலும் செய்யப்பட்ட தெய்வங்களான அந்நிய தெய்வங்களை வழிபடுவீர்கள்.
37
யெகோவா உங்களைத் துரத்திவிடும் மக்கள் கூட்டங்களுக்குள் நீங்கள் அவர்களுக்கு பயங்கரக் காட்சியாகவும், ஏளனத்துக்கும், கேலிக்கும் உரியவர்களாகவும் இருப்பீர்கள்.
38
நீங்கள் அதிக விதைகளை விதைப்பீர்கள். ஆனால் சொற்ப அறுவடையே பெறுவீர்கள். ஏனெனில் வெட்டுக்கிளிகள் அவற்றைத் தின்றுவிடும்.
39
நீங்கள் திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அவற்றைப் பேணி வளர்ப்பீர்கள். ஆனால் அவற்றிலிருந்து பழங்களைச் சேர்க்கவோ, இரசத்தைக் குடிக்கவோமாட்டீர்கள். ஏனெனில் புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
40
நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.
41
உங்களுக்கு மகன்களும், மகள்களும் இருப்பார்கள். ஆனால் நீங்கள் அவர்களை வைத்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள்.
42
உங்கள் மரங்களையும், நிலத்தின் பயிர்களையும் வெட்டுக்கிளிக்கூட்டங்கள் அரித்துவிடும்.
43
உங்கள் மத்தியில் வாழும் அந்நியன் உங்களைவிட மேலும் மேலும் உயர்நிலையடைவான். நீங்களோ மேலும் மேலும் கீழ்நிலையடைவீர்கள்.
44
அவன் உங்களுக்குக் கடன் கொடுப்பான், நீங்கள் அவனுக்குக் கடன் கொடுக்கமாட்டீர்கள். அவன் தலையாயிருப்பான், நீங்களோ வாலாயிருப்பீர்கள்.
45
இந்தச் சாபங்கள் எல்லாம் உங்கள்மேல் வரும். நீங்கள் அழிந்துபோகும்வரை அவை உங்களைப் பின்தொடர்ந்து பற்றிப்பிடிக்கும். நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் விதிமுறைகளையும் கைக்கொள்ளாமலும் போனபடியினால் இப்படி நடக்கும்.
46
இவை உங்களுக்கும், உங்கள் சந்ததிக்கும் என்றென்றைக்கும் ஒரு அடையாளமும், அதிசயமுமாய் இருக்கும்.
47
நீங்கள் செழிப்பாய் இருந்த காலத்தில், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு நீங்கள் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் பணிசெய்யவில்லை.
48
ஆகையால் நீங்கள் பசியோடும், தாகத்தோடும், நிர்வாணத்தோடும், கொடிய வறுமையோடும் யெகோவா உங்களுக்கு எதிராக அனுப்பும் பகைவருக்குப் பணிசெய்வீர்கள். அவர் உங்களை அழித்தொழிக்கும் வரைக்கும் உங்கள் கழுத்தில் இரும்பு நுகத்தை வைப்பார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options