உபாகமம் 24:14-22
14
உங்கள் பட்டணங்களில் வாழும் உங்கள் சகோதர இஸ்ரயேலனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும் அவன் ஏழையும், வறியவனுமான ஒரு கூலிக்காரனாய் இருந்தால், உங்கள் சுயநலத்திற்காகச் சுரண்டிப்பிழைக்க வேண்டாம்.
15
அவனுடைய கூலியை ஒவ்வொரு நாளும் பொழுதுபடுமுன் கொடுத்துவிடுங்கள். அவன் ஏழையாய் இருப்பதால் அதையே நம்பியிருக்கிறான். இல்லையெனில் அவன் யெகோவாவிடம் உங்களுக்கெதிராக முறையிட நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாவீர்கள்.
16
பிள்ளைகளுடைய பாவங்களுக்காக பெற்றோரோ, பெற்றோரின் பாவங்களுக்காக பிள்ளைகளோ கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவரும் தனது சொந்தப் பாவங்களுக்காகவே கொல்லப்படவேண்டும்.
17
அந்நியருக்காவது, தந்தையற்றவர்களுக்காவது அநீதி செய்யவேண்டாம், விதவையின் மேலுடையை அடகாக வாங்கவேண்டாம்.
18
நீங்கள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தீர்கள் என்றும், உங்கள் இறைவனாகிய யெகோவாவே அங்கிருந்து உங்களை மீட்டாரென்றும் நினைவிற்கொள்ளுங்கள். அதனால்தான் இதைச் செய்யும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
19
உங்களுடைய வயலில் நீங்கள் அறுவடை செய்யும்போது, ஒரு கதிர்க்கட்டை தவறுதலாக விட்டுவிட்டால், அதை எடுப்பதற்குத் திரும்பிப் போகவேண்டாம். அதை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் கைகளின் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பார்.
20
ஒலிவப்பழங்களைப் பறிப்பதற்காக நீங்கள் உங்கள் மரங்களை உலுக்கிய பின்பு, இரண்டாம் முறையும் பழங்களைப் பறிப்பதற்காக கிளைகளில் தேடவேண்டாம். அதில் மீதியாய் உள்ளவற்றை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள்.
21
உங்கள் திராட்சைத் தோட்டத்தில் பழங்களை அறுவடை செய்தபின், திரும்பவும் திராட்சைக்கொடிகளில் பழங்களைத் தேடிப்போகவேண்டாம். மீந்திருப்பவைகளை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள்.
22
எகிப்து நாட்டில் நீங்கள் அடிமைகளாயிருந்தீர்கள் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அதனால்தான் இதைச் செய்யும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
Settings