உபாகமம் 12:2-14
2
அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
3
அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள்.
4
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழிகளில் வழிபடக்கூடாது.
5
நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவா எல்லா கோத்திரங்களிலிருந்தும் தமது உறைவிடமாகத் தெரிந்துகொண்டு, தமது பெயரை இடுகிற அந்த இடத்தையே தேடவேண்டும். அந்த இடத்திற்கே நீங்கள் போகவேண்டும்;
6
நீங்கள் அங்கேயே உங்கள் தகன காணிக்கைகள், பலிகள், உங்கள் பத்திலொரு பங்கு, நீங்கள் கொடுப்பதாக நேர்ந்துகொண்ட விசேஷ அன்பளிப்புகள், சுயவிருப்பு காணிக்கைகள், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றுகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும்.
7
அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
8
இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது.
9
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது.
10
நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலேபோய் வாழப்போகிறீர்கள். அங்கே அவர் உங்களைச்சூழ உள்ள பகைவர்களிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார். நீங்கள் அங்கே பாதுகாப்பாய் வாழ்வீர்கள்.
11
பின்பு உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் வழங்கும்படி தமக்கு வசிப்பிடமாகத் தெரிந்துகொள்ளும் இடத்துக்கு நீங்கள் போவீர்கள். அங்கே நான் கட்டளையிடுகிற ஒவ்வொன்றையும் கொண்டுவர வேண்டும். உங்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், உங்கள் பத்திலொரு பங்கையும், கொடைகளையும், யெகோவாவுக்குக் கொடுப்பேன் என நீங்கள் நேர்த்திக்கடன்செய்த எல்லா உடைமைகளையும் கொண்டுவாருங்கள்.
12
அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக களிகூருங்கள். நீங்களும் உங்கள் மகன்களும், மகள்களும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் தங்களுக்கு சொந்தப் பங்கோ உரிமைச்சொத்தோ இல்லாத உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியருமான எல்லோரும் களிகூருங்கள். பலிகளுக்குரிய நிபந்தனைகள்
13
நீங்கள் விரும்பிய இடமெல்லாம் தகன காணிக்கைகளைப் பலியிடாதபடி கவனமாய் இருங்கள்.
14
உங்கள் கோத்திரங்களில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மட்டுமே அவற்றைச் செலுத்துங்கள். நான் கட்டளையிட்ட யாவையும் அங்கே செய்யுங்கள்.
Settings