Skip to content
ஆமோஸ் 7:10-17

ஆமோஸ் 7:10-17

10
அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “ஆமோஸ் இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக்கொண்டிருக்க முடியாதிருக்கிறது.
11
ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது: “ ‘யெரொபெயாம் வாளினால் சாவான். இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டுத் தூரமாய் போவார்கள்.’ ”
12
அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல்.
13
இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான்.
14
அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன்.
15
ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார்.
16
ஆகவே இப்பொழுதும் நீ யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள், “ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே, ஈசாக்கின் வீட்டிற்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கிறாயே.
17
“ஆதலால் யெகோவா சொல்வது இதுவே: “ ‘உன் மனைவி இந்த நகரத்தில் வேசியாவாள், உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள். உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும், நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே சாவாய். நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள். தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options