Skip to content
அப்போஸ்தலர் 3:16-26

அப்போஸ்தலர் 3:16-26

16
இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
17
“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்.
18
ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே.
19
ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும்.
20
இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார்.
21
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும்.
22
ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும்.
23
அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறானே.
24
“சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள்.
25
நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே.
26
எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options