2 இராஜாக்கள் 11:4-12
4
ஏழாம் வருடத்தில் யோய்தா கேரியரிலும், காவலாளரிலும் நூறுபேருக்குத் தளபதிகளாய் இருந்தவர்களை யெகோவாவின் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தான். முதலில் யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து ஒரு வாக்குறுதியும் பெற்றுக்கொண்டான். அதன்பின் அரசனுடைய மகனை அவர்களுக்குக் காட்டினான்.
5
மேலும் அவன் அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது, “நீங்கள் செய்யவேண்டியது இதுவே: ஓய்வுநாளில் மூன்று குழுவினராக உங்கள் கடமைகளைச் செய்யும் உங்களில், மூன்றில் ஒரு பகுதியினர் அரண்மனையைப் பாதுகாக்க வேண்டும்.
6
மற்ற மூன்றில் ஒரு பகுதியினர் சூர் வாசலையும், மூன்றில் ஒரு பகுதியினர் ஆலயத்தை மாறிமாறி காவல் காக்கிறவர்களுக்குப் பின்புறமாக இருக்கும் வாசலையும் காவல் காக்கவேண்டும்.
7
ஓய்வுநாளில் வழக்கமான கடமை முடிந்து செல்லும் இரு பிரிவினரும் அரசனுக்காக யெகோவாவினுடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.
8
ஒவ்வொருவரும் தன்தன் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக அரசனைச் சுற்றி நில்லுங்கள். உங்கள் வரிசையை நெருங்குபவன் எவனும் கொல்லப்படவேண்டும். அரசன் எங்கே போனாலும், வந்தாலும் அவருக்குச் சமீபமாய் நில்லுங்கள்” என்று கூறினான்.
9
ஆசாரியனான யோய்தா உத்தரவிட்டபடியே, நூறுபேருக்கு தளபதிகள் செய்தார்கள். ஓய்வுநாளில் பணிபுரிகிறவர்களும், விடுப்பில் போகிறவர்களுமான தம்தம் மனிதரை ஆசாரியனான யோய்தாவிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
10
அதன்பின் ஆசாரியனாகிய யோய்தா யெகோவாவின் ஆலயத்திலிருந்த, தாவீது அரசனுக்குச் சொந்தமான ஈட்டிகளையும், கேடயங்களையும் தளபதிகளிடம் கொடுத்தான்.
11
காவலாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கையில் ஆயுதம் பிடித்தவர்களாக, தெற்குப் பக்கத்திலிருந்து வடக்குப் பக்கம்வரை ஆலயத்திற்கும், பலிபீடத்திற்கும் அருகே அரசனைச் சூழ்ந்து நின்றார்கள்.
12
அதன்பின் யோய்தா அரசனின் மகனை வெளியே கொண்டுவந்து அவனுக்கு முடிசூட்டி, உடன்படிக்கையின் ஒரு பிரதியை அவனிடம் கொடுத்து, அவனை அரசனாகப் பிரகடனம் செய்தான். அவர்கள் அவனை அரசனாக அபிஷேகம்பண்ணி, தங்கள் கைகளைத் தட்டி, “அரசன் நீடூழி வாழ்க” என ஆர்ப்பரித்தார்கள்.
Settings