2 நாளாகமம் 6:1-11
1
அப்பொழுது சாலொமோன்: “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்,
2
நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான்.
3
இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான்.
4
பின்பு அவன், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. அவர் எனது தகப்பன் தாவீதுக்கு வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார். அவர் சொன்னதாவது,
5
அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவுமில்லை, எனது மக்களான இஸ்ரயேல்மேல் தலைவனாயிருக்கும்படி ஒருவனையும் தேர்ந்தெடுக்கவுமில்லை.
6
ஆனால் இப்பொழுது நான் எனது பெயர் விளங்கும்படி எருசலேமைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்.’
7
“இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது.
8
ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான்.
9
அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.
10
“இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன்.
11
அங்கே நான் பெட்டியை வைத்தேன். அதில் இஸ்ரயேல் மக்களுடன் யெகோவா செய்த உடன்படிக்கை இருக்கிறது” என்றான்.
Settings