1 இராஜாக்கள் 18:7-16
7
ஒபதியா தன் வழியாக நடந்து போய்க்கொண்டிருந்தபோது எலியா அவனைச் சந்தித்தான். ஒபதியா அவனை இன்னாரென அறிந்து, அவனுக்கு முன்னால் முகங்குப்புற விழுந்து, “உண்மையிலே நீர் என் தலைவனாகிய எலியாதானா” என்றான்.
8
அதற்கு எலியா, “ஆம், உன் தலைவனிடம் போய் எலியா இங்கு இருக்கிறான் என்று சொல்” என்றான்.
9
அதற்கு ஒபதியா, “உமது அடியானை என்னை ஆகாபிடம் சாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு நான் என்ன பிழை செய்திருக்கிறேன்?
10
உம்முடைய இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், எனது எஜமான் உம்மைத் தேடும்படி ஆட்களை அனுப்பாத நாடும் இல்லை, அரசாட்சியும் இல்லை. எந்த நாடாவது, எந்த அரசாட்சியாவது வந்து நீர் எங்குமில்லை என்று சொன்னால், உம்மைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று அவர்களைச் சத்தியம் செய்யும்படிச் செய்வார்.
11
ஆனால் நீரோ இப்போது என்னைப் பார்த்து, ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று அவனிடம் போய்ச் சொல்லும்படி சொல்கிறீர்.
12
நான் இப்போது உம்மை விட்டுப்போனவுடன் யெகோவாவின் ஆவியானவர் எங்கே உம்மைக் கொண்டுபோய் விடுவாரோ என்று எனக்குத் தெரியாது. நான் ஆகாபிடம் போய் உம்மைப்பற்றிக் கூறும்போது ஆகாப் வந்து இந்த இடத்தில் உம்மைக் காணாவிட்டால் என்னைக் கொன்றுபோடுவானே. இருந்தும் என் இளமைப் பருவத்திலிருந்து உமது அடியவனாகிய நான் யெகோவாவையே வழிபட்டிருக்கிறேன்.
13
என் தலைவனே! யேசபேல் யெகோவாவின் இறைவாக்கினர்களைக் கொலைசெய்தபோது நான் செய்தவற்றை நீர் கேள்விப்படவில்லையா? நான் யெகோவாவின் இறைவாக்கினர் நூறு பேரை இரண்டு குகைகளில் ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்துச் சாப்பாடும், தண்ணீரும் கொடுத்தேனே.
14
இப்போது என்னை என் எஜமானிடம் போய், ‘எலியா இங்கே இருக்கிறான்’ என்று சொல்லச் சொல்கிறீரே. அவன் என்னைக் கொன்றுபோடுவான்” என்றான்.
15
அதற்கு எலியா, “நான் பணிசெய்யும் சேனைகளின் யெகோவா இருப்பது நிச்சயமெனில், ஆகாபின் சமுகத்தில் போய் நிற்பேன் என்பதும் நிச்சயம்” என்றான்.
16
அப்பொழுது ஒபதியா ஆகாபுக்குச் செய்தியைச் சொல்வதற்காகப்போனான். ஆகாப் அதைக்கேட்டு எலியாவைச் சந்திக்கப் போனான்.
Settings