1 இராஜாக்கள் 18:20-29
20
அப்பொழுது ஆகாப் இஸ்ரயேல் முழுவதற்கும் செய்தி அனுப்பி, எல்லா இறைவாக்கினரையும் கர்மேல் மலைக்குக் கூடிவரும்படி செய்தான்.
21
எலியா எல்லா மக்களின் முன்னும் நின்று அவர்களைப் பார்த்து, “நீங்கள் எவ்வளவு காலத்துக்கு இரண்டு அபிப்பிராயங்களுக்கு இடையில் தடுமாறிக் கொண்டிருப்பீர்கள்? யெகோவா இறைவனானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் இறைவனானால் அவனைப் பின்பற்றுங்கள்” என்றான். மக்களோ ஒன்றும் சொல்லவில்லை.
22
அப்பொழுது எலியா அவர்களைப் பார்த்து, “யெகோவாவின் இறைவாக்கினரில் நான் ஒருவன் மட்டுமே மீதியாயிருக்கிறேன். ஆனால் பாகாலுக்கு நானூற்றைம்பது தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள்.
23
இப்போது இரண்டு காளைகளைக் கொண்டுவாருங்கள். அவர்கள் தங்களுக்கு ஒன்றைத் தெரிந்துகொள்ளட்டும். அதைத் துண்டுகளாக்கி விறகுகளின்மேல் வைக்கட்டும், ஆனால் நெருப்பை மூட்டவேண்டாம். மற்றக் காளையை நான் ஆயத்தப்படுத்தி, விறகுகளில் வைத்து நெருப்பை மூட்டாமல் விடுவேன்.
24
அதன்பின் நீங்கள் உங்கள் தெய்வத்தின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுங்கள். நான் யெகோவாவின் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவேன். நெருப்பினால் பதிலளிக்கும் தெய்வமே இறைவன்” என்றான். அப்பொழுது எல்லா மக்களும், “நீர் கூறியது நல்லதுதான்” என்றார்கள்.
25
எலியா பாகாலின் இறைவாக்கினரைப் பார்த்து, “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதனால், முதலில் நீங்கள் ஒரு காளையைத் தெரிந்தெடுத்து, ஆயத்தப்படுத்தி, உங்கள் தெய்வத்தைக் கூப்பிடுங்கள். ஆனால் நெருப்புக் கொழுத்தக் கூடாது” என்றான்.
26
அப்படியே அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை எடுத்து, ஆயத்தப்படுத்தினார்கள். அதன்பின்பு காலையிலிருந்து நண்பகல்வரை, பாகாலின் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டார்கள். “பாகாலே எங்களுக்குப் பதில் கொடும்” என்று கத்தினார்கள். ஆனால் அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அப்பொழுது அவர்கள் தாங்கள் செய்த பலிமேடையைச் சுற்றி நடனமாடினார்கள்.
27
மத்தியானமானபோது எலியா அவர்களைக் கேலிசெய்யத் தொடங்கினான். “இன்னும் பலமாகச் சத்தமிடுங்கள். அவன் ஒரு தெய்வம்தான். ஒருவேளை அவன் ஆழமாக யோசித்துக்கொண்டிருப்பான் அல்லது வேலைகள் செய்துகொண்டிருப்பான் அல்லது தூரப்பயணம் போயிருப்பான் அல்லது நித்திரையாயிருந்தால் யாரும் அவனை எழுப்பவேண்டியதாயிருக்கும்” என்றான்.
28
இதனால் அவர்கள் இன்னும் பலமாகக் கத்தி, தாங்கள் வழக்கமாகச் செய்வதைப்போல் வாள்களாலும், ஈட்டிகளாலும் இரத்தம் வடியும்வரை தங்களை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
29
நண்பகல் கடந்து மாலை பலிசெலுத்தும் நேரம் வரும்வரை அவர்கள் பொய்யாய் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மறுமொழி எதுவும் வரவுமில்லை, ஒருவரும் பதிலளிக்கவுமில்லை, ஒருவரும் கவனிக்கவுமில்லை.
Settings