1 நாளாகமம் 29:20-25
20
அதன்பின்பு தாவீது கூடியிருந்தவர்கள் எல்லோரிடமும், “யெகோவாவாகிய உங்கள் இறைவனைத் துதியுங்கள்” என்றான். எனவே மக்கள் எல்லோரும் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைத் துதித்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கும், அரசனுக்கும் முன்பாக முகங்குப்புற விழுந்து குனிந்து வணங்கினார்கள்.
21
அடுத்தநாள் அவர்கள் யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்தினர். அதோடு தகன காணிக்கைகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் செம்மறியாட்டுக் கடாக்களையும், ஆயிரம் கடாக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் பானகாணிக்கையையும், வேறு பலிகளையும் இஸ்ரயேல் அனைவருக்காகவும் செலுத்தினார்கள்.
22
அந்த நாளிலே அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பெருமகிழ்ச்சியுடன் சாப்பிட்டு குடித்தார்கள். அதன்பின் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகத் தாவீதின் மகன் சாலொமோனை ஆளுநனாய் இருக்கும்படியும், சாதோக்கை ஆசாரியனாக இருக்கும்படியும் இரண்டாம் முறையாக அபிஷேகம்பண்ணி ஏற்றுக்கொண்டார்கள்.
23
எனவே சாலொமோன் தன் தகப்பன் தாவீதின் இடத்தில் யெகோவாவின் அரியணையில் அரசனாய் அமர்ந்திருந்தான். அவன் செழிப்படைந்தான்; எல்லா இஸ்ரயேலரும் அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
24
எல்லா அதிகாரிகளும், செல்வாக்குள்ளவர்களும் தாவீதின் மற்ற எல்லா மகன்களும்கூட அரசன் சாலொமோனுக்கு கீழ்ப்படிவதாக வாக்குக்கொடுத்தனர்.
25
யெகோவா சாலொமோனை எல்லா இஸ்ரயேலரின் பார்வையிலும் மிகவும் உயர்த்தினார். இஸ்ரயேலில் ஒரு அரசனும் முன் ஒருபோதும் பெற்றிருக்காத அரச மகத்துவத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.
Settings