Skip to content

எசேக்கியேல்8

1
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட ஆறாம் வருடத்தின் ஆறாம் மாதம் ஐந்தாம் நாளிலே நான் என் வீட்டில் அமர்ந்திருந்தேன். யூதாவின் முதியவர்களும் எனக்கு முன்பாக உட்கார்ந்து இருந்தார்கள். ஆண்டவராகிய யெகோவாவின் கரம் அங்கே என்மீது இறங்கிற்று.
2
நான் பார்த்தபோது, மனிதனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டேன். அவருடைய இடையைப்போல் தோன்றியதன் கீழ்ப்பகுதியில் அவர் நெருப்பைப்போல் இருந்தார். மேற்பகுதியிலோ அவருடைய தோற்றம் தகதகக்கும் உலோகம்போல் மினுமினுப்பாய் இருந்தது.
3
கை போன்று காணப்பட்டதொன்றை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார். ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாகத் தூக்கி, இறைவனின் தரிசனத்தில் அவர் என்னை எருசலேமின் உள்முற்றத்தின் வடக்கு திசைக்கு கொண்டுபோனார். அங்கே எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது.
4
அப்பொழுது, நான் சமவெளியில் கண்ட தரிசனத்தைப்போலவே இஸ்ரயேலின் இறைவனுடைய மகிமை என்முன் தோன்றிற்று.
5
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, வடக்கு நோக்கிப்பார்” என்றார். அவ்வாறே நான் பார்த்தேன். பலிபீட வாசலின் வடக்கே உட்செல்லும் வழியில் அந்த எரிச்சல் உண்டாக்குகிற விக்கிரகம் இருந்தது.
6
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? இஸ்ரயேல் குடும்பத்தார் மிக அருவருப்பான செயல்களை இங்கு செய்கிறார்களே. அவை என்னை என் பரிசுத்த இடத்திலிருந்து தூரமாக விலக்கிவிடுமே. ஆனால் இவைகளைவிட அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.
7
பின்பு அவர் என்னை முற்றத்து வாசலுக்குக் கொண்டுவந்தார். அங்கே சுவரில் ஒரு துளையைக் கண்டேன்.
8
அவர் என்னிடம், “மனுபுத்திரனே சுவரில் ஒரு துளையிடு” என்றார். நான் துளையிட்டபோது, ஒரு வாசல் இருந்தது.
9
அவர் என்னிடம், “நீ உள்ளே போய், அங்கே அவர்கள் செய்யும் கொடியதும், அருவருக்கத்தக்கதுமான காரியங்களைப் பார்” என்றார்.
10
நான் உள்ளே போய்ப் பார்த்தேன். இதோ எல்லா விதமான ஊரும்பிராணிகள், அருவருப்பான மிருகங்கள் ஆகியவற்றின் உருவங்களும், இஸ்ரயேலரின் சகல விக்கிரகங்களும், சுவரிலே சித்திரங்களாய்த் தீட்டப்பட்டிருந்தன.
11
இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த எழுபது சபைத்தலைவர்களும் அவைகளின் முன்னே நின்றார்கள். அவர்களின் நடுவே சாப்பானின் மகன் யசனியாவும் நின்றான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளிலே தூபகிண்ணங்களை ஏந்தியபடி நின்றார்கள். அவைகளிலிருந்து வாசனைப் புகை எழும்பிற்று.
12
அப்பொழுது அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரயேல் குடும்பத்தின் சபைத்தலைவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் விக்கிரகங்களின் முன் இருளில் செய்கிறதைக் கண்டாயா? அவர்கள், ‘யெகோவா எங்களைப் பார்க்கிறதில்லை; யெகோவா நாட்டைக் கைவிட்டுவிட்டார்’ ” என்கிறார்கள்.
13
மேலும் யெகோவா என்னிடம், “இவைகளைப் பார்க்கிலும் மிக மோசமான காரியங்களையும் அவர்கள் செய்வதை நீ காண்பாய்” என்றார்.
14
பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் வடக்கு வாசலின் முன் கொண்டுவந்தார். அங்கே தம்மூஸ் என்னும் தெய்வத்திற்காக பெண்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.
15
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைப் பார்த்தாயா? இதிலும் அருவருப்பான காரியங்களையும் நீ காண்பாய்” என்றார்.
16
பின்பு அவர் என்னை யெகோவாவினுடைய ஆலயத்தின் உள்முற்றத்திற்குக் கொண்டுவந்தார். அங்கே ஆலய வாசல் நடையிலே பலிபீடத்துக்கும், முன் மண்டபத்திற்கும் நடுவாக ஏறத்தாழ இருபத்தைந்துபேர் இருந்தார்கள். அவர்கள் தங்கள் முதுகை யெகோவாவினுடைய ஆலயத்திற்கும், முகத்தை கிழக்குத் திசைக்கும் நேராய்த் திருப்பி, கிழக்கிலே உதிக்கும் சூரியனைத் தலைகுனிந்து வழிபட்டுக்கொண்டு இருந்தார்கள்.
17
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? யூதா குடும்பத்தினர் இங்கே செய்யும் இந்த அருவருப்பான காரியங்கள், ஒரு சிறிய காரியமாய் இருக்கிறதா? அவர்கள் வன்செயலால் நாட்டை நிரப்பி, தொடர்ந்து எனக்குக் கோபமூட்ட வேண்டுமோ? இவர்களைப் பார்! திராட்சைக்கிளையைத் தங்கள் மூக்கிற்கு நேராகத் தூக்கிப் பிடிக்கிறார்களே.
18
ஆகையால் நான் அவர்களை கோபத்துடனேயே நடத்துவேன். அவர்கள்மீது நான் கருணை காட்டப்போவதில்லை. நான் அவர்களைத் தப்பவிடப் போவதுமில்லை. அவர்கள் என் செவிகள் கேட்க சத்தமாய்க் கூப்பிட்டாலும், நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன்.”
Use arrow keys to navigate
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options