Skip to content
எண்ணாகமம் 7:1-11

எண்ணாகமம் 7:1-11

1
மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்து முடித்தபின், அதையும் அதன் பொருட்களையும், அபிஷேகித்து அர்ப்பணம் செய்தான். அத்துடன் அவன் பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி அர்ப்பணம் செய்தான்.
2
பின்பு இஸ்ரயேலரின் தலைவர்களான, எண்ணப்பட்டவர்களுக்குப் பொறுப்பாயிருந்த கோத்திரங்களின் தலைவர்களான குடும்பத் தலைவர்கள், தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
3
அவர்கள் ஆறு கூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு எருதுகளையும் ஒரு தலைவனுக்கு ஒரு எருதும், இரண்டு தலைவனுக்கு ஒரு வண்டியுமாக யெகோவாவுக்கு முன்பாகத் தங்கள் கொடைகளாகக் கொண்டுவந்தார்கள். இவற்றை அவர்கள் இறைசமுகக் கூடாரத்திற்குமுன் வைத்து கொடுத்தார்கள்.
4
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
5
“சபைக்கூடார வேலைக்கு பயன்படுத்தும்படியாக அவற்றை நீ அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். அவற்றை ஒவ்வொருவனுடைய வேலைகளுக்கும் வேண்டியபடி லேவியரிடம் கொடு” என்றார்.
6
எனவே மோசே அந்த வண்டிகளையும், எருதுகளையும் லேவியரிடம் கொடுத்தான்.
7
அவன் இரண்டு வண்டிகளையும், நாலு எருதுகளையும் கெர்சோனியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையான அளவு கொடுத்தான்.
8
மெராரியருக்கு அவர்களுடைய வேலைக்குத் தேவையானபடி நாலு வண்டிகளையும் இரண்டு எருதுகளையும் கொடுத்தான். அவர்கள் எல்லோரும் ஆசாரியனாகிய ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் வழிகாட்டலின் கீழ் இருந்தார்கள்.
9
ஆனால் மோசே கோகாத்தியருக்கு வண்டிகளையோ எருதுகளையோ கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் தாங்கள் பொறுப்பாயிருந்த பரிசுத்த பொருட்களைத் தங்கள் தோள்களிலேயே சுமக்கவேண்டும்.
10
பலிபீடம் அபிஷேகம் பண்ணப்பட்ட போது, தலைவர்கள் தங்கள் காணிக்கைகளை அதன் அர்ப்பணிப்பிற்காகக் கொண்டுவந்து பலிபீடத்திற்கு முன்னால் வைத்தார்கள்.
11
ஏனெனில், “பலிபீடத்தின் அர்ப்பணிப்பிற்காக ஒரு நாளைக்கு ஒரு தலைவனாக தன் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும்” என்று யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options