எண்ணாகமம் 35:1-8
1
யோர்தானுக்கு அருகே, எரிகோவுக்கு எதிரே மோவாப் சமவெளியில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
2
“இஸ்ரயேலர் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் சொத்தில் இருந்து, லேவியர் குடியிருப்பதற்கு அவர்களுக்குப் பட்டணங்களைக் கொடுக்கும்படி, இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு. அப்பட்டணங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
3
அப்பொழுது அவர்கள் வாழ்வதற்குப் பட்டணங்களும், அவர்களுடைய மாட்டு மந்தைகளுக்கும், ஆட்டு மந்தைகளுக்கும் மற்றும் வளர்ப்பு மிருகங்களுக்குமான மேய்ச்சல் நிலங்களும் அவர்களுக்கு இருக்கும்.
4
“நீங்கள் லேவியருக்குக் கொடுக்க இருக்கும் பட்டணங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்கள் பட்டண மதிலில் இருந்து சுற்றிலும் ஆயிரத்து ஐந்நூறு அடிவரை விசாலமுள்ளதாயிருக்கவேண்டும்.
5
பட்டணத்திற்கு வெளியே கிழக்குப் பக்கமாக மூவாயிரம் அடியையும், தெற்குப் பக்கமாக மூவாயிரம் அடியையும், மேற்குப் பக்கமாக மூவாயிரம் அடியையும், வடக்குப் பக்கமாக மூவாயிரம் அடியையும் பட்டணம் நடுவில் இருக்கக்கூடியதாக அளக்கவேண்டும். பட்டணங்களுக்கான மேய்ச்சல் நிலமாக அவர்கள் இந்நிலப்பரப்பை வைத்துக்கொள்வார்கள்.
6
“லேவியருக்குக் கொடுக்க இருக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலப் பட்டணங்களாயிருக்கவேண்டும். எவனையாவது கொலைசெய்த ஒருவன் அங்கு தப்பியோடலாம். அத்துடன் அவர்களுக்கு வேறு நாற்பத்து இரண்டு பட்டணங்களும் கொடுக்கப்படவேண்டும்.
7
மொத்தமாக நீங்கள் லேவியருக்கு நாற்பத்தெட்டு பட்டணங்களை அவர்களுடைய மேய்ச்சல் நிலங்களுடன் கொடுக்கவேண்டும்.
8
இஸ்ரயேலர் உரிமையாக்கிக்கொள்ளும் சொத்திலிருந்து நீ லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்கள், ஒவ்வொரு கோத்திரத்தின் உரிமைச்சொத்தின் அளவுக்கு ஏற்றபடியே கொடுக்கப்படவேண்டும். பல பட்டணங்கள் உள்ள கோத்திரத்திடமிருந்து பல பட்டணங்களையும், சில பட்டணங்கள் உள்ளவர்களிடமிருந்து சில பட்டணங்களையும் எடுக்கவேண்டும்” என்றார்.
Settings