லேவியராகமம் 24:10-23
10
ஒரு எகிப்திய மனிதனுக்கும், இஸ்ரயேல் பெண்ணுக்கும் மகனான ஒரு மனிதன் இஸ்ரயேல் மக்களுக்குள் போனான். அவனுக்கும் ஒரு இஸ்ரயேலனுக்கும் இடையில் முகாமுக்குள் சண்டை மூண்டது.
11
அந்த நேரத்தில் இஸ்ரயேல் பெண்ணின் மகனான அவன், யெகோவாவின் பெயரை தூஷண வார்த்தைகளால் நிந்தித்தான். எனவே அவர்கள் அவனை மோசேயிடம் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாய் தாண் கோத்திரத்து திப்ரியின் மகளான செலோமித்.
12
அவனைப்பற்றி யெகோவாவின் விருப்பம் தெளிவாகும் வரை, அவனை அவர்கள் காவலில் வைத்தார்கள்.
13
அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசிச் சொன்னதாவது:
14
“நீ நிந்தித்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவன் நிந்தித்ததைக் கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவன் தலையில் வைக்கவேண்டும். பின்பு சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும்.
15
நீ இஸ்ரயேலரிடம் சொல்லவேண்டியதாவது: யாராவது தன் இறைவனை நிந்தித்தால், அக்குற்றத்திற்கு அவன் பொறுப்பாளியாவான்.
16
யெகோவாவின் பெயரை நிந்திக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். சபையார் அனைவரும் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவன் பிறநாட்டினனோ, தன் நாட்டினனோ யெகோவாவின் பெயரை நிந்தித்தால் அவன் கொல்லப்படவேண்டும்” என்றார்.
17
“ ‘யாராவது ஒருவன் ஒரு மனித உயிரைக் கொலை செய்தால், அவன் கொல்லப்படவேண்டும்.
18
யாராவது ஒருவன் இன்னொருவனுடைய மிருகத்தைக் கொன்றால், அவன் உயிருக்குப்பதில், உயிராகப் பதிலீடு செய்யவேண்டும்.
19
யாராவது ஒருவன் தன் அயலானை காயப்படுத்தினால், அவன் செய்தபடியே, அவனுக்கும் திருப்பிச் செய்யப்படவேண்டும்.
20
முறிவுக்கு முறிவு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதிலீடு செய்யப்படவேண்டும். மற்றவனைக் காயப்படுத்தியது போலவே இவனும் அவ்விதமாய் காயப்படுத்தப்பட வேண்டும்.
21
மிருகத்தைக் கொல்லுகிற எவனும் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும். ஆனால் மனிதனைக் கொல்லுகிறவனோ கொல்லப்படவேண்டும்.
22
உங்களிடம் தன் நாட்டினனுக்கும், பிறநாட்டினனுக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்கவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
23
மோசே இஸ்ரயேலருடன் பேசினான். அவர்கள் இறைவனை நிந்தனை செய்தவனை முகாமுக்கு வெளியே கொண்டுபோய் கல்லெறிந்து கொன்றார்கள். இவ்விதமாய் மோசேக்கு யெகோவா கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்தார்கள்.
Settings