லேவியராகமம் 23:15-22
15
“ ‘நீங்கள் அசைவாட்டும் காணிக்கையாகக் கதிர்க்கட்டைக் கொண்டுவந்த நாளான ஓய்வுநாளுக்கு அடுத்த நாளிலிருந்து, முழுமையாக ஏழு வாரங்களை எண்ணுங்கள்.
16
ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள்.
17
நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
18
இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும்.
19
அதன்பின் பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சமாதான காணிக்கையாக, ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதாயிருக்கிற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பலியிடுங்கள்.
20
ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும்.
21
அதே நாளில் பரிசுத்த சபைக்கூடுதலை நீங்கள் அறிவிக்கவேண்டும். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம். நீங்கள் எங்கே வாழ்ந்தாலும் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாயிருக்கவேண்டும்.
22
“ ‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.
Settings