லேவியராகமம் 10:1-11
1
ஆரோனின் மகன்களான நாதாபும், அபியூவும் தங்கள் தூபகிண்ணங்களில் நெருப்பைப்போட்டு, நறுமணத்தூளை அதில் போட்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு முரண்பாடாக, அங்கீகரிக்கப்படாத நெருப்பை யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள்.
2
உடனே யெகோவாவின் முன்னிருந்து நெருப்பு புறப்பட்டுவந்து அவர்களை எரித்துப்போட்டது. அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் செத்தார்கள்.
3
அப்பொழுது மோசே ஆரோனிடம் சொன்னது: “ ‘என்னை நெருங்கி வருகிறவர்களிடையே நான் என்னைப் பரிசுத்தராகக் காண்பிப்பேன். எல்லா மக்களின் பார்வையிலும் நான் மகிமைப்படுவேன்’ என்று யெகோவா சொன்னபோது அவர் குறிப்பிட்டது இதுவே.” ஆரோனோ ஒன்றும் பேசாமல் இருந்தான்.
4
பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களான மீசயேலையும், எல்சாபானையும் அழைத்து, “இங்கே வாருங்கள்; உங்கள் சகோதரர்களின் உடல்களை முகாமுக்கு வெளியே பரிசுத்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள்” என்றான்.
5
மோசே உத்தரவிட்டபடியே அவர்கள் வந்து, இறந்தவர்களை அவர்களின் அங்கிகளுடன் தூக்கி, முகாமுக்கு வெளியே கொண்டுபோனார்கள்.
6
மோசே ஆரோனிடமும், அவனுடைய மகன்களான எலெயாசார், இத்தாமார் என்பவர்களிடமும், “நீங்கள் துக்கம் அநுசரிப்பதற்காக உங்கள் தலைமயிரைக் குலையவிடவும், உடைகளைக் கிழித்துக்கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். யெகோவா முழு சமுதாயத்தின்மேலும் கோபங்கொள்வார். ஆனால் உங்கள் உறவினரான இஸ்ரயேல் குடும்பத்தார் அனைவரும், யெகோவா நெருப்பினால் அழித்தவர்களுக்காக துக்கம் அநுசரிக்கலாம்.
7
நீங்கள் சபைக்கூடார வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். அப்படிப் புறப்பட்டால் யெகோவாவினுடைய அபிஷேக எண்ணெய் உங்கள்மேல் இருப்பதால் நீங்கள் சாவீர்கள்” என்றான். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.
8
யெகோவா ஆரோனுக்குச் சொன்னதாவது:
9
“நீயும் உன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்பொழுது, திராட்சை இரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ குடிக்கவேண்டாம். குடித்தால் நீங்கள் சாவீர்கள். தலைமுறைதோறும் இது ஒரு நிரந்தரமான நியமம்.
10
நீ பரிசுத்தமானதற்கும், சாதாரணமானதற்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டவேண்டும். சுத்தத்திற்கும், அசுத்தத்திற்கும் இடையிலும் வித்தியாசத்தைக் காட்டவேண்டும்.
11
அத்துடன் யெகோவா மோசேயின் மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கிற விதிமுறைகள் எல்லாவற்றையும் நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டும்” என்றார்.
Settings