எசேக்கியேல் 5:12-17
12
உனது மக்கள் கூட்டங்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும் நகரத்திற்குள் அழிவார்கள். நகரத்துக்கு வெளியே மூன்றில் ஒரு பங்கினர் வாளால் மடிவார்கள். மூன்றில் ஒரு பகுதியினரை நான் காற்றில் சிதறடித்து, உருவின வாளோடு அவர்களைப் பின்தொடர்வேன்.
13
“அப்பொழுது என் கோபம் தீர்ந்துவிடும். அவர்களுக்கெதிரான என் கடுங்கோபமும் தணியும். நான் பழிதீர்த்துக்கொள்வேன். என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவாகிய நான் வைராக்கியத்தோடு அதைப் பேசினேன் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
14
“மேலும், உன்னைச் சுற்றிலும் வாழும் நாடுகளின் மத்தியில், உன்னைக் கடந்துபோகும் ஒவ்வொருவருடைய பார்வையிலும் உன்னைப் பாழும், பழிச்சொல்லுமாக்குவேன்.
15
நான் கோபத்தினாலும், ஆத்திரத்தினாலும், கடுமையான கண்டிப்பினாலும் உனக்குத் தண்டனை வழங்குவேன். அப்பொழுது நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற நாடுகளுக்கு நிந்தையும், பரிகாசமும், எச்சரிப்பும், பயங்கரக் காட்சியுமாய் இருப்பாய். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்.
16
கொடிய பஞ்சத்தின் அம்புகளால் நான் உன்னைத் தாக்கும்போது, உன்னை அழிப்பதற்காகவே அதை எய்வேன். நான் உன்மேல் அதிகமதிகமாய்ப் பஞ்சத்தைக் கொண்டுவந்து உணவு வழங்குவதையும் நிறுத்துவேன்.
17
பஞ்சத்தையும் காட்டு விலங்குகளையும் உனக்கு விரோதமாய் அனுப்புவேன். அவைகளினால் நீங்கள் பிள்ளையற்றவர்களாவீர்கள். கொள்ளைநோயும், இரத்தம் சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும். நான் உனக்கு விரோதமாய் வாளையும் வரப்பண்ணுவேன். யெகோவாவாகிய நானே பேசினேன்” என்றார்.
Settings