எசேக்கியேல் 30:10-19
10
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரின் கையினால், எகிப்திய மக்கள்கூட்டத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
11
நாடுகளுக்குள் மிகக் கொடியவனான அவனும், அவன் இராணுவமும் நாட்டை அழிப்பதற்காகக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள், தங்கள் வாள்களை எகிப்திற்கு விரோதமாய் உருவி, கொலையுண்டவர்களால் நாட்டை நிரப்புவார்கள்.
12
நான் நைல் நதியின் நீரோட்டங்களை வற்றச்செய்து, நாட்டைத் தீயோருக்கு விற்றுப்போடுவேன். நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும் அந்நியரின் கையினால் பாழாக்கிவிடுவேன். யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்.
13
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ ‘நான் விக்கிரகங்களை அழித்து மெம்பிஸில் உள்ள உருவச் சிலைகளுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன். எகிப்தில் இனியொருபோதும் இளவரசன் ஒருவன் எழும்புவதில்லை. நாடெங்கும் நான் பயத்தை ஏற்படுத்துவேன்.
14
நான் எகிப்தின் பத்ரோஸைப் பாழாக்கி, சோவானுக்கு நெருப்புமூட்டி, தேபேஸைத் தண்டிப்பேன்.
15
எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல், என் கோபத்தை ஊற்றுவேன். தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.
16
நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்; பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்; தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்! மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும்.
17
ஹெலியோபொலிஸ், பூபாஸ்டிஸ் நகரங்களின் வாலிபர்கள் வாளினால் சாவார்கள். நகரங்களிலுள்ளவர்களும் சிறைப்பட்டுப் போவார்கள்.
18
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும் நாளிலே, தக்பானேஸில் பகல் இருளாகும். அதனுடைய பெருமையான பெலனும் ஒரு முடிவுக்கு வரும். அது மேகங்களால் மூடப்படும். அதன் கிராமங்களிலுள்ளவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்.
19
இவ்வாறாக, நான் எகிப்தைத் தண்டிப்பேன். அவர்களும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ”
Settings