யாத்திராகமம் 30:22-38
22
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
23
“நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல்,
24
இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
25
இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும்.
26
இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
27
மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
28
தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
29
அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
30
“அத்துடன் ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும்.
31
இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும்.
32
இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் இதைப் பரிசுத்தமாய் எண்ணவேண்டும்.
33
இதேபோல் வாசனைத் தைலத்தைச் செய்கிறவனோ அல்லது ஆசாரியரைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசுகிறவனோ தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
34
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருட்களை சமமான அளவு எடுத்துக்கொண்டு,
35
இவற்றை வாசனை தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளைச் செய்யவேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும்.
36
அதில் கொஞ்சத்தை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான சபைக் கூடாரத்திலுள்ள சாட்சிப்பெட்டிக்கு முன் வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகா பரிசுத்தமுள்ளதாய் இருக்கும்.
37
இந்தக் கலவை முறையைக் கொண்டு உங்களுக்காக வேறெந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக்கூடாது. இதை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள்.
38
அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
Settings