Skip to content
உபாகமம் 9:8-21

உபாகமம் 9:8-21

8
ஓரேபிலே நீங்கள் யெகோவாவுக்கு கோபம் மூழச்செய்தீர்கள். அதனால் அவர் உங்களை அழித்துப்போடும் அளவுக்குக் கோபம்கொண்டார்.
9
யெகோவா உங்களுடன் செய்த உடன்படிக்கையை எழுதின கற்பலகைகளை பெற்றுக்கொள்ளும்படி, நான் மலைக்குப் போனபோது, அங்கே இரவும் பகலும் நாற்பது நாட்கள் தங்கினேன். அப்பொழுது நான் உணவு சாப்பிடவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
10
அங்கே இறைவனின் விரலினால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடம் கொடுத்தார். சபைக்கூடிய அந்த நாளிலே, யெகோவா மலையின்மேல் நெருப்பின் நடுவிலிருந்து உங்களுக்கு அறிவித்த கட்டளைகளெல்லாம் அவற்றில் இருந்தன.
11
இரவும் பகலுமாக நாற்பது நாட்கள் முடிந்தபின் உடன்படிக்கைப் பலகைகளான இரண்டு கற்பலகைகளை யெகோவா எனக்குக் கொடுத்தார்.
12
பின்பு யெகோவா என்னிடம், “இங்கிருந்து உடனடியாக இறங்கிப்போ. ஏனெனில் நீ எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த உன்னுடைய மக்கள் சீர்கெட்டவர்களாகி விட்டார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்டதிலிருந்து விரைவாய் விலகிப்போய்த் தங்களுக்காக வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைச் செய்துகொண்டார்கள்” என்றார்.
13
மேலும் யெகோவா என்னிடம், “இந்த மக்களை நான் பார்த்தேன். உண்மையிலேயே இவர்கள் ஒரு கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.
14
நான் அவர்களை அழித்து, அவர்களுடைய பெயரை வானத்தின்கீழ் இல்லாமல் செய்யவிடு. நான் அவர்களைப்பார்க்கிலும் உன்னை வலிமையானதும், அதிகமானதுமான நாடாக்குவேன்” என்றார்.
15
எனவே, நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போதே, நான் மலையிலிருந்து திரும்பி, கீழே இறங்கிப் போனேன். என் கைகளில் இரண்டு உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
16
கீழே நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்திருந்ததை நான் கண்டேன். நீங்கள் ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தில், வார்க்கப்பட்ட ஒரு விக்கிரகத்தை உங்களுக்காக செய்திருந்தீர்கள். யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்டிருந்த வழியிலிருந்து விரைவில் விலகியிருந்தீர்கள்.
17
அப்பொழுது நான் அந்த இரண்டு கற்பலகைகளையும் எனது கைகளிலிருந்து வீசி எறிந்து, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே அவற்றை உடைத்தேன்.
18
யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்து, அவருக்குக் கோபமூட்டி, நீங்கள் செய்திருந்த எல்லா பாவங்களுக்காகவும், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன். நான் உணவு சாப்பிடவுமில்லை; தண்ணீர் குடிக்கவுமில்லை.
19
ஏனெனில் நான் யெகோவாவின் கோபத்திற்கும், அவருடைய கடுங்கோபத்திற்கும் பயந்தேன். உங்களை அழித்துப்போடும் அளவுக்கு அவர் கோபங்கொண்டிருந்தார். ஆனாலும் யெகோவா திரும்பவும் எனக்குச் செவிகொடுத்தார்.
20
ஆரோனை அழிக்கும் அளவுக்கு யெகோவா அவன்மேல் கோபம்கொண்டார். அப்பொழுது ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன்.
21
உங்கள் கைகள் செய்த பாவச்சின்னமான அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து நெருப்பில்போட்டு எரித்தேன். அதை நொறுக்கி, புளுதியைப்போல் தூளாக அரைத்து, அதை மலையிலிருந்து கீழே ஓடும் நீரோடையில் எறிந்தேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options