உபாகமம் 30:1-10
1
நான் உங்கள்முன் வைத்த இந்த எல்லா ஆசீர்வாதங்களும், சாபங்களும் உங்கள்மேல் வரும்பொழுது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எந்த நாடுகளின் மத்தியில் சிதறடித்தாரோ, அவர்கள் மத்தியிலிருந்தே இவைகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.
2
நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றின்படியும், உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குக் கீழ்ப்படிந்தால்,
3
அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் இழந்துபோன செல்வங்களை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். அவர் உங்கள்மேல் மனமிரங்கி, உங்களைச் சிதறடித்திருக்கிற எல்லா நாடுகளிலுமிருந்து உங்களைத் திரும்பவும் கூட்டிச்சேர்ப்பார்.
4
வானத்தின்கீழ் இருக்கும் மிகத் தூரமான நாட்டிற்கு நீங்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்த்து, மீண்டும் கொண்டுவருவார்.
5
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாயிருந்த நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவார்; நீங்கள் அதைத் திரும்பவும் உரிமையாக்கிக்கொள்வீர்கள். அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களிலும் பார்க்க அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், எண்ணிக்கையில் அதிகமானோராகவும் ஆக்குவார்.
6
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் இருதயங்களையும், உங்கள் சந்ததியாரின் இருதயங்களையும் விருத்தசேதனம்பண்ணுவார். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர்ந்து வாழ்வீர்கள்.
7
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வெறுத்துத் துன்புறுத்தும் உங்கள் பகைவர்கள்மேல் இந்தச் சாபங்களையெல்லாம் வரப்பண்ணுவார்.
8
திரும்பவும் நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் அவருடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வீர்கள்.
9
அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளிலும் உங்களை அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாக்குவார். உங்களுடைய கர்ப்பத்தின் கனியிலும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளிலும், உங்கள் நிலத்தின் பயிர் வகைகளிலும் செழிப்பைக் கட்டளையிடுவார். அவர் உங்கள் முற்பிதாக்களில் மகிழ்ச்சியடைந்தது போலவே, உங்களிலும் மகிழ்ந்து உங்களைச் செழிப்படையப்பண்ணுவார்.
10
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பும்போது அவர் உங்களைச் செழிக்கப்பண்ணுவார்.
Settings