2 இராஜாக்கள் 25:22-26
22
யூதாவில் மீதியாக வைத்த மக்களின் மேலாக சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் நியமித்தான்.
23
யூதாவின் இராணுவ அதிகாரிகளும், அவர்களைச் சேர்ந்த எல்லா மனிதரும், பாபிலோன் அரசன், கெதலியாவை நாட்டுக்கு ஆளுநனாக நியமித்தான் என்று கேள்விப்பட்டபோது, மிஸ்பாவில் இருக்கும் கெதலியாவிடம் சென்றார்கள். இவ்வாறு சென்றவர்கள் நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், கரேயாவின் மகன் யோகனானும், நெத்தோபாத்தியனான தன்கூமேத்தின் மகன் செராயாவும், மாகாத்தியரின் மகன் யசனியாவும், அவர்களுடைய மனிதரும் ஆவர்.
24
அப்பொழுது கெதலியா அவர்களுக்கும், அவர்களுடைய மனிதர்களுக்கும் நம்பிக்கையூட்டும்படி ஒரு ஆணையைச் செய்தான். அவன், “கல்தேயரின் அதிகாரிகளுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். நீங்கள் நாட்டில் வாழ்ந்து, பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் நன்மையாக இருக்கும்” என்றான்.
25
ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனுமான இஸ்மயேல், பத்து மனிதரோடு வந்து கெதலியாவையும், யூதாவின் மனிதரையும், மிஸ்பாவில் அவனோடிருந்த கல்தேயரையும் கொன்றான்.
26
இதனால் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களும் இராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து கல்தேயருக்குப் பயந்து எகிப்திற்கு ஓடிப்போனார்கள்.
Settings