2 இராஜாக்கள் 15:27-31
27
யூதாவின் அரசனான அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில் ரெமலியாவின் மகன் பெக்கா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் இருபது வருடங்கள் அங்கே அரசாண்டான்.
28
இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.
29
இஸ்ரயேலின் அரசன் பெக்காவின் நாட்களில், அசீரிய அரசன் திக்லாத்பிலேசர் என்பவன் படையெடுத்து வந்து தாக்கினான். அவன் ஈயோன், ஆபேல் பெத்மாக்கா, யனோவாக், கேதேசு, ஆத்சோர் ஆகிய பட்டணங்களையும், கீலேயாத், கலிலேயா ஆகிய நாடுகளையும், நப்தலி நாடு முழுவதையும் கைப்பற்றினான். பின்பு அவன் அங்கிருந்த மக்கள் யாவரையும் அசீரியாவுக்கு நாடுகடத்தினான்.
30
இதன்பின் ஏலாவின் மகன் ஓசெயா ரெமலியாவின் மகன் பெக்காவுக்கு விரோதமாகச் சதி செய்தான். அவன் அவனைத் தாக்கிக் கொன்றான். பின்பு உசியாவின் மகன் யோதாம் யூதாவில் அரசாண்ட இருபதாம் வருடத்தில் ஓசெயா இஸ்ரயேலின் அரசனாக வந்தான்.
31
பெக்காவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் சாதித்த செயல்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
Settings