1 நாளாகமம் 23:24-32
24
இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர்.
25
அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார்.
26
ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான்.
27
தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே.
28
யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல்,
29
அதோடு மேஜையில் வைக்கும் அப்பங்கள், தானிய காணிக்கைக்குத் தேவையான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பங்கள் ஆகியவற்றைப் பிசையவும், சுடவும், நிறுக்கவும், அத்துடன் அதன் தொகையையும், பருமனையும் கவனிப்பதற்கும் பொறுப்பாயிருத்தல்.
30
அவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும் யெகோவாவுக்கு நன்றிகூறி துதிக்கவேண்டும். அப்படியே மாலையிலும் செய்யவேண்டும்.
31
அத்துடன் ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களிலும் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தும் போதெல்லாம் அவ்வாறே துதிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவுக்கு முன்குறிப்பிட்ட எண்ணிக்கையின்படியும், கட்டளைப்படியும் ஒழுங்காக பணிசெய்ய வேண்டும்.
32
எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள்.
Settings